சென்னை:'பெரம்பலுார் மாவட்டம், வேப்பந்தட்டை கிராமத்தில் உள்ள வேத மாரியம்மன் கோவில் திருவிழா நடக்கும்போது, பட்டியலின மக்கள் வசிக்கும் தெருக்களில் தேர் செல்வதை, மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெரம்பலுார் மாவட்டம், வேப்பந்தட்டை கிராமத்தில் வேத மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் தேர், பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் வருவதற்கு, மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவிப்பதாக, வேப்பந்தட்டை கிராமத்தைச் சேர்ந்த வினோத்குமார், மணிவண்ணன் ஆகியோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், குறிப்பிட்ட தெருவுக்குள் தேர் செல்ல முடியுமா என்பதையும், சாலையின் அகலம், தேரின் நீளம், அகலம் போன்றவை குறித்தும் ஆய்வு செய்து, பெரம்பலுார் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு இருந்தது. இந்த மனு, நீதிபதி பி.வேல்முருகன் முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு தலைவர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'குறிப்பிட்ட தெருக்களில் எந்த இடையூறும் இல்லாமல் தேர் செல்ல முடியும்' என கூறப்பட்டிருந்தது. இதை பதிவு செய்த நீதிபதி, ''கோவிலில் திருவிழா நடக்கும்போது, பட்டியலின மக்கள் வசிக்கும் தெருக்களின் வழியாக தேர் செல்ல வேண்டும்; அதற்கு தேவையான பாதுகாப்பை, மாவட்ட காவல் துறை வழங்க வேண்டும்,'' என உத்தரவிட்டார்.