உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பட்டியலின மக்கள் தெருவில் தேர் செல்ல வேண்டும்

பட்டியலின மக்கள் தெருவில் தேர் செல்ல வேண்டும்

சென்னை:'பெரம்பலுார் மாவட்டம், வேப்பந்தட்டை கிராமத்தில் உள்ள வேத மாரியம்மன் கோவில் திருவிழா நடக்கும்போது, பட்டியலின மக்கள் வசிக்கும் தெருக்களில் தேர் செல்வதை, மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெரம்பலுார் மாவட்டம், வேப்பந்தட்டை கிராமத்தில் வேத மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் தேர், பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் வருவதற்கு, மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவிப்பதாக, வேப்பந்தட்டை கிராமத்தைச் சேர்ந்த வினோத்குமார், மணிவண்ணன் ஆகியோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், குறிப்பிட்ட தெருவுக்குள் தேர் செல்ல முடியுமா என்பதையும், சாலையின் அகலம், தேரின் நீளம், அகலம் போன்றவை குறித்தும் ஆய்வு செய்து, பெரம்பலுார் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு இருந்தது. இந்த மனு, நீதிபதி பி.வேல்முருகன் முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு தலைவர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'குறிப்பிட்ட தெருக்களில் எந்த இடையூறும் இல்லாமல் தேர் செல்ல முடியும்' என கூறப்பட்டிருந்தது. இதை பதிவு செய்த நீதிபதி, ''கோவிலில் திருவிழா நடக்கும்போது, பட்டியலின மக்கள் வசிக்கும் தெருக்களின் வழியாக தேர் செல்ல வேண்டும்; அதற்கு தேவையான பாதுகாப்பை, மாவட்ட காவல் துறை வழங்க வேண்டும்,'' என உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

R.RAMACHANDRAN
ஜூலை 24, 2025 07:24

நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளார். ஆனால் அதனை அமல்படுத்துவார்களா. தெய்வம் பஞ்ச பூதங்கள் ஆகியன எல்லோருக்கும் சேவை செய்கின்றன. ஆனால் மக்கள் கோயில்களின் பெயரால் தீண்டாமையை கடைபிடிக்கின்றனர்.இதற்கு தண்டனை அடுத்த பிறவியில் தீண்ட தகாதவர்களாக பிறந்து அல்லல்பட வேண்டும் என்பதை நினைவில் கொண்டால் வெற்றுரைத்து வினைப்பெருக்கி மெலிகின்ற உலகினார்களாக இருக்கமாட்டார்கள். வானுலக கொடு வழக்கத்தை விட்டுவிடுவார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை