| ADDED : ஜன 15, 2024 02:30 AM
கூடலுார்: உச்சநீதிமன்ற உத்தரவுப்படி முல்லைப் பெரியாறு அணை நீர்ப்பிடிப்பில் சர்வே பணி நேற்று துவங்கியது.தேக்கடிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் படகு நிறுத்தப் பகுதி அருகே நிறுத்தப்பட்டு வந்தது. அப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகவும், வனவிலங்குகளுக்கு தொந்தரவு ஏற்படுவதாகவும் கூறி அங்கிருந்த கார் பார்க்கிங்கை 2014ல் குமுளி அருகே உள்ள ஆனைவச்சால் என்ற இடத்திற்கு மாற்றினர். 2.50 ஏக்கர் பரப்பளவில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் கார் பார்க்கிங் கட்டுமானப் பணியை கேரள வனத்துறை துவக்கியது.கார் பார்க்கிங் அமைக்கும் பகுதி தமிழக நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முல்லைப் பெரியாறு அணை நீர்த்தேக்கப் பகுதியில் நடப்பதாகவும் அதனை தடுத்து நிறுத்தக் கோரியும் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், ஆனைவச்சாலில் கட்டப்பட்டு வரும் கார் பார்க்கிங் 1886 அணை ஒப்பந்தப்படி தமிழக நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர்த்தேக்கப் பகுதியில் உள்ளதா, அல்லது கேரள அரசுக்கு சொந்தமான இடத்தில் உள்ளதா என்பதை இந்திய நில அளவைத்துறை அல்லது பரிந்துரை செய்யப்படும் அதிகாரிகள் சார்பில் சர்வே செய்து அறிக்கை தாக்கல் செய்ய 2023 டிசம்பரில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்த உத்தரவைத் தொடர்ந்து நேற்று இந்திய நில அளவியல் துறை திட்ட இயக்குநர்கள் ராஜசேகரன், மகேஷ் தலைமையில் 7 பேர் கொண்ட குழு சர்வே பணியை துவக்கியது. முதற்கட்டமாக தேக்கடி கார் பார்க்கிங், முல்லைப் பெரியாறு அணையை பார்வையிட்டனர். நில அளவைத்துறை உதவி இயக்குனர் சரவணன், பெரியாறு அணை செயற்பொறியாளர் சாம் இர்வின், உதவி செயற்பொறியாளர் குமார், உதவிப் பொறியாளர் ராஜகோபால் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர். இந்த சர்வே பணி ஜன., 16 வரை நடைபெறுகிறது.