| ADDED : டிச 23, 2025 12:00 PM
நமது நிருபர்
2026ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த தமிழக பாஜ தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் சென்னை வந்துள்ளார். அவர் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்ஐ சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, தேர்தல் பிரசாரம் என அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் ஈடுபட்டு இருக்கின்றனர். அந்தவகையில், மத்திய அமைச்சரும், தமிழக பாஜ தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ்கோயல் சென்னை வந்தார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட பாஜ நிர்வாகிகள் பியூஷ் கோயலை பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் வரவேற்றனர்.மையக்குழு கூட்டம்
சென்னை கமலாலயத்தில் தமிழக பாஜவின் மையக்குழு கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் தமிழக பா.ஜ., தேர்தல் பொறுப்பாளர் பியூஷ்கோயல், இணை பொறுப்பாளர் அர்ஜூன் ராம் மேக்வால், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொகுதி பங்கீடு
அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்-ஐ சந்தித்து, தமிழக பாஜ தேர்தல் பொறுப்பாளர் பியூஷ்கோயல் ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது தொகுதி பங்கீடு குறித்து முக்கிய பேச்சு நடத்த இருக்கிறார். இதில் பாஜ போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியல் அதிமுக நிர்வாகிகள் வசம் ஒப்படைக்கப்பட உள்ளது.