மேலும் செய்திகள்
கன மழையால் ரயில்கள் 30 நிமிடம் தாமதம்
01-Dec-2024
சென்னை:புயல்மழை காரணமாக, மாற்றுப்பாதையில் இயக்கப்பட்ட விரைவு ரயில்கள், நேற்று வழக்கம் போல இயக்கப்பட்டன.விக்கிரவாண்டி - முண்டியம்பாக்கம் இடையே, ரயில்வே பாலத்தின் மேல் வெள்ளம் ஓடியதால், கன்னியாகுமரி, செங்கோட்டை உட்பட தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி நேற்று முன்தினம் வந்த, 12 விரைவு ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன. அத்துடன், 15க்கும் மேற்பட்ட ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டது.இந்நிலையில், விக்கிரவாண்டி - முண்டியம்பாக்கம் பாலம் வழியாக, வழக்கம் போல நேற்று ரயில்கள் இயக்கப்பட்டன. ஆனாலும், குறைந்த வேகத்தில் இயக்க வேண்டிய நிலை இருந்ததால், முத்துநகர், நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட ரயில்கள், சென்னைக்கு நேற்று தாமதமாக வந்தன.துாத்துக்குடியில் இருந்து சென்னை எழும்பூருக்கு, காலை 7:35 மணிக்கு வர வேண்டிய முத்துநகர் விரைவு ரயில், காலை 10:15க்கு வந்தடைந்தது. செங்கோட்டை, கன்னியாகுமரி, திருநெல்வேலியில் இருந்து வந்த ரயில்கள், ஒரு மணி நேரத்துக்கு மேலாக தாமதமாக வந்தன.இந்நிலையில், சென்னையில் இருந்து அனைத்து ரயில்களும் வழக்கமான பாதையில் நேற்று இயக்கப்பட்டன. இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:இணை ரயில் வருவதில் தாமதம் ஏற்பட்டதால், எழும்பூர் - ராமேஸ்வரம் ரயில், இரண்டு மணி நேரம் தாமதமாக நேற்று இயக்கப்பட்டது. மற்ற அனைத்து விரைவு ரயில்களும், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு வழக்கம்போல இயக்கப்பட்டன.இவ்வாறு அவர்கள் கூறினர்.
01-Dec-2024