சபரிமலை புல்மேடு வனப்பாதையில் எஸ்.பி., ஆய்வு
கூடலுார் : சபரிமலைக்குச் செல்லும் சத்திரம், புல்மேடு வனப்பாதையை இடுக்கி எஸ்.பி. விஷ்ணு பிரதீப் ஆய்வு செய்தார்.சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல கால பூஜைக்காக நவ.15 (நாளை) மாலையில் நடை திறக்கப்படுகிறது. இதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து ஐயப்ப பக்தர்கள் ஏராளமானோர் வருவர். குமுளியில் இருந்து வண்டிப்பெரியாறு, எரிமேலி வழியாக பம்பை வரை 100 கி.மீ., துாரம் வாகனத்தில் சென்று அங்கிருந்து 7 கி.மீ. துாரம் வனப்பகுதி வழியாக நடந்து சென்றால் கோயிலை அடையலாம்.அதே வேளையில் குமுளி வண்டிப்பெரியாறு,வல்லக்கடவு வரை வாகனத்தில் சென்று அங்கிருந்து சத்திரம், புல்மேடு வனப்பாதையில் 14 கி.மீ., துாரம் நடந்து சென்றால் குறைவான நேரத்தில்கோயிலை அடைந்து விடலாம். அதனால் விரைவாக கோயிலுக்கு சென்று திரும்பும் பக்தர்கள்இவ்வழியை அதிகம் பயன்படுத்துவார்கள்.2010 ஜனவரியில் புல்மேட்டில் மகரஜோதி தரிசனம்முடித்து திரும்பியஐயப்ப பக்தர்கள் 102 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிர் இழந்தனர். இச் சம்பவத்தைத் தொடர்ந்து புல்மேடு வனப்பாதை மூடப்பட்டது. இதனை ஒட்டியுள்ள சத்திரம் வனப்பகுதி வழியாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்த ஆண்டு இப்பாதையில் பக்தர்களுக்காக பல்வேறு வசதிகள் ஏற்படுத்தி நடந்து செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக கடந்த ஒரு வாரத்திற்கு மேல் கேரள வனத்துறையினரால் பாதை சீரமைப்பு பணி நடந்தது. இந்நிலையில் இடுக்கி எஸ்.பி.விஷ்ணு பிரதீப், ஜீரோ பாயிண்டில் இருந்து வனப்பாதை வழியாக சத்திரம் வரை நடந்து சென்று ஆய்வு மேற்கொண்டார். சத்திரத்தில் வனத்துறை, தேவசம்போர்டு சார்பில் பக்தர்களுக்காக செய்யும் வசதிகள் குறித்து பார்வையிட்டார். அதிகாலை 5:00 மணியிலிருந்து மதியம் 3:00 மணி வரை மட்டுமே இப்பாதையில் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். சிறப்பு பிரிவு டி.எஸ்.பி. ராஜீவ் செரியன்,வண்டிப்பெரியாறு இன்ஸ்பெக்டர் சுவர்ண குமார், வனத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.