சென்னை: மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் வீட்டில், பட்டாக்கத்தி, சொத்து ஆவணங்கள், 'லேப்டாப், ஹார்டு டிஸ்க்' உள்ளிட்டவற்றை சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் கைப்பற்றினர்.சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில், டிசம்பர், 23ம் தேதி மாணவி ஒருவர், பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்தச் சம்பவத்தில், கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன், 37 என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, புக்யா சினேஹப்ரியா, ஐய்மன் ஜமால், பிருந்தா ஆகிய மூன்று பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழு, இவ்வழக்கை விசாரித்து வருகிறது.பாதிக்கப்பட்ட மாணவி அளித்த வாக்குமூலம் அடிப்படையில், இந்த வழக்கில், இரண்டாம் குற்றவாளி இருக்கலாம் என, சிறப்பு புலனாய்வுக் குழு சந்தேகித்துள்ளது.அதன்படி, வழக்கில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கலாம் என்ற கண்ணோட்டத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் அண்ணா பல்கலை பேராசிரியர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி முடித்துள்ளது.இதைத் தொடர்ந்து, கோட்டூர்புரத்தில் உள்ள ஞானசேகரனின் வீட்டில், நேற்று காலை முதல் சிறப்பு புலனாய்வுக் குழு சோதனையில் ஈடுபட்டது. மூன்று பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிகளுடன், 15க்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகளும் சோதனையில் ஈடுபட்டனர்.இதில் பகல், 12:00 மணியளவில் இரண்டு ஐ.பி.எஸ்., அதிகாரிகள் கிளம்பிச் சென்ற நிலையில், புக்யா சினேஹப்ரியா தலைமையில் தொடர்ந்து சோதனை நடந்தது. மாலை வரை நீடித்த சோதனையில், லேப்டாப், ஹார்ட் டிஸ்க், சொத்து ஆவணங்கள், பட்டாக்கத்தி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.பின், ஞானசேகரன் மனைவியிடம் விசாரணை நடத்தி, எழுத்து வடிவில் வாக்குமூலம் பெற்றனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் குறித்த ஆவணத்திலும் கையெழுத்து வாங்கினர். மாலை, 5:00 மணி வரை நடந்த சோதனையை முடித்து, பறிமுதல் செய்த ஆவணங்களை எடுத்துச் சென்றனர்.சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரி புக்யா சினேஹப்ரியாவிடம், 'யார் அந்த சார் என்ற விபரம் கிடைத்ததா' என, செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, ''சிறிது கால அவகாசம் கொடுங்கள்,'' என்று பதிலளித்தார்.தற்போது கைப்பற்றப்பட்டுள்ள ஆவணங்களை ஆய்வு செய்தபின், வழக்கில் மற்ற யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கலாம் என்பது குறித்து விசாரிக்க, ஞானசேகரனை காவலில் எடுக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
'யூக செய்திகள் விசாரணையை பாதிக்கும்'
தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கை: சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையில் கிடைத்த தகவல்கள், முன்னேற்றங்கள் எனக்கூறி, சில கருத்துகளை, பொதுவெளியிலும் ஊடகங்களிலும் வெளியிட்டு வருகின்றனர். குறிப்பாக, குற்றவாளி ஒரு சாரிடம் பேசியதாக சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்ததாகவும், பாதிக்கப்பட்ட பெண் தொடர்பான ஆபாச பதிவுகள் இடம் பெற்ற மின்னணு உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும், அதில், திருப்பூரைச் சேர்ந்த ஒரு நபரும் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு உள்ளதாகவும், ஆதாரமற்ற தகவல்கள் வெளியிடப்படுகின்றன. விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து, சிறப்பு புலனாய்வுக் குழு யாருக்கும் தெரிவிக்கவில்லை; அறிக்கையாக வெளியிடவும் இல்லை. அதனால், குழு விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து, பொதுவெளியில் வரும் தகவல்கள் முற்றிலும் தவறானவை; எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாதவை. ஆதாரமற்ற மற்றும் யூகத்தின் அடிப்படையிலான தகவல்கள், மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதுடன், வழக்கு விசாரணையையும் பாதிக்கும்.எனவே, யூகங்களின் அடிப்படையில் செய்திகள் வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும். தவறான தகவல்கள், சம்பந்தப்பட்டவர்களுக்கு கடுமையான பின்விளைவுகள் ஏற்படுத்துவதுடன், புலன் விசாரணையின் நம்பகத்தன்மையையும் பாதிக்கக் கூடும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சிறுவனால் பரபரப்பு!
அடுக்குமாடி குடியிருப்பில், ஒரு வீட்டில் ஞானசேகரன் குடும்பம் வசிக்கிறது. அந்த வீட்டில் சோதனை நடந்து கொண்டிருந்தபோது, மாலை, 3:30 மணியளவில், அருகில் வசிக்கும் குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன், குடியிருப்பின் நுழைவாயிலை பூட்டி சாவியை எடுத்துச் சென்று விட்டான். அந்த சிறுவனை தேடியும் கிடைக்காததால், பூட்டை உடைத்து அதிகாரிகள் வெளியே வந்தனர்.