அரபிக்கடலில் புயல்; வங்கக்கடலில் சுழற்சி ஒரு வாரத்திற்கு கனமழை தொடரும்
சென்னை:''தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், அடுத்த ஒரு வாரத்திற்கு கனமழை தொடர வாய்ப்புள்ளது,'' என, வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.அவர் அளித்த பேட்டி:லட்சத்தீவு மற்றும் அதையொட்டிய அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக, மத்திய கிழக்கு அரபிக்கடலில் நிலவுகிறது. இது மேலும் வலுவடைந்து, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறலாம். தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவு கிறது. அத்துடன், தெற்கு வங்கக்கடலின் மையப் பகுதியில், நாளை புதிதாக வளி மண்டல கீழடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்புள்ளது. இந்த இரண்டு சுழற்சிகள், காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறலாம். இது, வடகிழக்கு பருவமழையின் துவக்கமாகவும் இருக்கலாம்.வடமேற்கு மாநிலங்களில், தென்மேற்கு பருவக்காற்று விலகி வருகிறது. பிற மாநிலங்களிலும், தென்மேற்கு பருவக்காற்று விலகி, கிழக்கு திசை காற்று வீசும்போது, வடகிழக்கு பருவமழை துவங்கும். அடுத்த ஏழு நாட்களுக்கு தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில், இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அக்., 13, 14ல் உள் மாவட்டங்கள், வட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு எஸ்.பாலச்சந்திரன் கூறினார். இன்று
திண்டுக்கல், கரூர், நாமக்கல், திருச்சி, பெரம்பலுார், அரியலுார், சேலம், தர்மபுரி, கிருஷ்ண கிரி, திருப்பத்துார், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி. நாளை
திருப்பூர், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக் கல், விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, ராமநாத புரம், மதுரை, சிவகங்கை. சென்னை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டமாகக் காணப்படும், ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.