சென்னை:உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க, தமிழக அனைத்து எம்.பி.,க்கள் குழுவுக்கு, நாளை நேரம் ஒதுக்கப்பட்டு உள்ளது.தமிழகத்தில் கடந்த மாதம் 3, 4ம் தேதிகளில், 'மிக்ஜாம்' புயலால், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. டிச., 17, 18ல் பெய்த வரலாறு காணாத மழையால், துாத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில், கடுமையான வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டன.இரண்டு மிகப்பெரிய இயற்கை பேரிடர்களுக்கும், மத்திய அரசிடமிருந்து தமிழக அரசு நிவாரணத் தொகையாக, 37,907.19 கோடி ரூபாய் கோரியுள்ளது. இத்தொகையை உடனடியாக வழங்கக்கோரி, அனைத்து கட்சி எம்.பி.,க்கள், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்கப்பட்டு உள்ளதாக, கடந்த 4ம் தேதி முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.இந்நிலையில் அமித் ஷா, தமிழக அனைத்து கட்சி எம்.பி.,க்கள் குழு சந்திக்க, நாளை நேரம் ஒதுக்கி உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.