உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காலி மது பாட்டில் பெறும் திட்டம் டெண்டர் கோரியது டாஸ்மாக்

காலி மது பாட்டில் பெறும் திட்டம் டெண்டர் கோரியது டாஸ்மாக்

சென்னை:காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மதுக்கடைகளில் செயல்படுத்தும் பணிக்கு, ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய, 'டாஸ்மாக்' நிறுவனம், 'டெண்டர்' கோரியுள்ளது.நீதிமன்ற உத்தரவின்படி, காலி மதுபாட்டில்களை கடைகளிலேயே திரும்ப பெறும் திட்டத்தை செயல்படுத்த, டாஸ்மாக், 2022ல் முடிவு செய்தது. தற்போது, இத்திட்டம் ஒன்பது மாவட்டங்களில் முழுதுமாகவும், ஏழு மாவட்ட மலை பகுதிகளிலும் செயல்பாட்டில் உள்ளது. இங்குள்ள கடைகளில் மதுபாட்டில் விற்கப்படும் போது, கூடுதலாக, 10 ரூபாய் சேர்த்து வசூலிக்கப்படும். காலி பாட்டிலை கடைகளில் வழங்கியதும், 10 ரூபாய் திரும்ப வழங்கப்படுகிறது. இத்திட்டம், 38 மாவட்டங்களிலும் முழுதுமாக செயல்படுத்தப்பட உள்ளது. இதன்படி, அனைத்து மாவட்டங்களிலும் கிடைக்கும் காலி மது பாட்டில்கள், ஒப்பந்த நிறுவனங்கள் வாயிலாக சேகரிக்கப்படும். இந்த பணிக்கு, தற்போது தகுதியான ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய, மாவட்ட வாரியாக டாஸ்மாக் நிறுவனம், 'டெண்டர்' கோரியுள்ளது.இதுகுறித்து, டாஸ்மாக் பொது மேலாளர் ஒருவர் கூறுகையில், ''நீதிமன்ற உத்தரவில், காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம், வரும் ஏப்ரலுக்குள் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படும்; 15 மாவட்டங்களில் செயல்பாட்டிற்கு வந்துள்ள முழு கணினிமய திட்டம், வரும் மார்ச்சுக்குள் அனைத்து மாவட்டங்களிலும் செயல்பாட்டுக்கு வரும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !