திட்டக்குடி : மிகவும் பிற்படுத்தப்பட்டோர் விடுதியில் மாணவர்களுக்கு உணவு வழங்காத சமையலர்கள் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்த ராமநத்தம் தொழுதூரில் உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர்கள் விடுதியில் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உள்ள 27 மாணவர்கள் தங்கிப் படிக்கின்றனர். இவ்விடுதியில் வார்டன் பாண்டுரங்கன். சமையலர்கள் வேல்முருகன், விஸ்வநாதன் பணிபுரிகின்றனர்.
நேற்று காலை விடுதி மாணவர்களுக்கு புளிசாதம் வழங்கப்பட்டது. மதியம் பள்ளி முடிந்து சென்ற மாணவர்களுக்கு ரசம் மட்டுமே இருந்தது. மேலும், வார்டன் மற்றும் சமையலர் இருவரும் விடுதியில் இல்லாததால் பசி மிகுதியால் மாணவர்களே சமைத்து சாப்பிட்டனர். இதுகுறித்து கலெக்டர், உதவி கலெக்டர், தாசில்தார் ஆகியோருக்கு போன் மூலம் புகார் தெரிவித்தனர்.
திட்டக்குடி தாசில்தார் சையத்ஜாபர், வருவாய் அலுவலர் வெங்கடேசன், வி.ஏ.ஓ., ராஜராஜன், ராமநத்தம் போலீசார் விடுதிக்குச் சென்று மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். கடந்த சில மாதங்களாகவே மாணவர்களுக்கு சரியான முறையில் உணவு வழங்குவதில்லை என தெரியவந்தது. இதனையடுத்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாவட்ட நல அலுவலர் கணபதி, விடுதி வார்டன் பாண்டுரங்கனை பணியிட மாறுதலும், சமையலர்கள் வேல்முருகன், விஸ்வநாதன் ஆகியோரை 'சஸ்பெண்ட்' செ#தும் உத்தரவிட்டார்.