உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சட்டவிதியை பின்பற்ற மறுக்கும் அதிகாரிகளால் பதவி உயர்வில் பாதிக்கப்படும் வி.ஏ.ஓ.,க்கள்

சட்டவிதியை பின்பற்ற மறுக்கும் அதிகாரிகளால் பதவி உயர்வில் பாதிக்கப்படும் வி.ஏ.ஓ.,க்கள்

மதுரை: வருவாய்த் துறையில் வி.ஏ.ஓ.,க்கள், இளநிலை உதவியாளர், டைப்பிஸ்ட், ஸ்டெனோக்கள் டி.என்.பி.எஸ்.சி.,யில் குரூப் 4 தேர்வு மூலம் நியமனம் செய்யப்படுகின்றனர். இவர்களுக்கு பதவி உயர்வின்போது அடுத்த நிலையில் உதவியாளராக நியமிக்கப்படுவர். இதற்கு வி.ஏ.ஓ.,க்களுக்கு சீனியாரிட்டி பட்டியல் தயாரிக்கும்போது, அவர்களின் பணிநியமன நாளை கணக்கில் கொள்ளாமல் பாரபட்சமாக நடப்பதாகவும், இதனால் சீனியாரிட்டி பட்டியலில் அவர்கள் பின்தங்கி கடைசி இடத்திற்கு தள்ளப்படுவதாகவும் புலம்புகின்றனர். சீனியாரிட்டி தயாரிப்பதை அரசு ஊழியர்களின் விதிமுறைப்படி செய்தால் அவர்களுக்கு பதவி உயர்வில் நியாயமான இடம் கிடைக்கும். அவ்வாறு செய்யாததால் மற்ற பிரிவினரெல்லாம் தாசில்தார் வரை சென்றுவிடும்போது, வி.ஏ.ஓ.,க்கள் மட்டும் அப்பணிக்கு செல்லாமலேயே ஓய்வு பெற்று விடுகின்றனர். தமிழ்நாடு வருவாய்த்துறை பதவி உயர்வு அலுவலர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் ஜெயகணேஷ் கூறியதாவது: சீனியாரிட்டியை நிர்ணயம் செய்வது குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் (பணிநிபந்தனைகள்) சட்டம் 14/20016ல் குறிப்பிட்டுள்ளனர். வருவாய்த்துறையில் பதவி உயர்வு பெறும் இளநிலை உதவியாளர், தட்டச்சர்களுக்கு இந்த சட்டவிதிப்படி முதுநிலை நிர்ணயம் செய்கின்றனர். ஆனால் வி.ஏ.ஓ.,க்களுக்கு சட்டவிதி மறுக்கப்படுவது ஒருதலைப்பட்சமானது. இவ்வகையில் 2015 ம் ஆண்டு முதல் 1500 பேர் பாதித்துள்ளனர். பணிநிபந்தனைகள் சட்டப்படி சீனியாரிட்டியை நிர்ணயம் செய்ய வேண்டும் என முதல்வர் முதல் வருவாய் நிர்வாக ஆணையர் வரை பலதரப்பிலும் பலமுறை மேல்முறையீடு செய்தும், பலகட்ட போராட்டம் நடத்தியும் இன்றும் சட்டவிதிகளை பின்பற்ற மறுக்கின்றனர். இதற்கு காரணமானோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !