கோவை : மத்திய அரசில் காலியாக உள்ள இரண்டு கேபினட் அமைச்சர் பதவிகளை நிரப்புவது தொடர்பாக, கோவையில் நேற்று நடந்த தி.மு.க., பொதுக்குழுவில் எந்த முடிவும் எடுக்கப்படாததால், எதிர்பார்ப்பில் இருந்த எம்.பி.,க்களும், அவர்களது ஆதரவாளர்களும் ஏமாற்றம் அடைந்தனர்.
தி.மு.க., சார்பில் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த ராஜா, தயாநிதி ஆகியோர், '2 ஜி' ஊழல் வழக்கில் குற்றச்சாட்டுக்கு ஆளானதால் பதவி இழந்தனர். தற்போது அழகிரி மட்டுமே, தி.மு.க.,வின் பிரதிநிதியாக கேபினட்டில் இடம் பெற்றுள்ளார். 'காலியான இரு கேபினட் அமைச்சர் பதவிகள் யாருக்கு கிடைக்கும்' என்பது பற்றி, கட்சிக்குள் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியது. திருச்சி சிவா, ஏ.கே.எஸ்.விஜயன், இளங்கோவன் ஆகியோருக்கு வாய்ப்பு இருப்பதாகவும், தகவல்கள் வெளியாகின.
'இது குறித்து கட்சியின் பொதுக்குழுவில் பேசி முடிவு செய்தபின் அறிவிப்பதாக', அமைச்சரவை மாற்றத்துக்கு முன்னதாக தன்னை வந்து சந்தித்த மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம், தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்திருந்தார். புதிய அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்ச்சிக்குப்பின் பேட்டியளித்த பிரதமர் மன்மோகனும், 'கூட்டணி தர்மத்தின் அடிப்படையில், தி.மு.க.,வுக்காக இரு இடங்கள் கேபினட்டில் காலியாக வைத்திருப்பதாக' தெரிவித்திருந்தார்.
இதனால், 'அமைச்சர் பதவி யாருக்கு கிடைக்கும்' என்ற எதிர்பார்ப்புடன், எம்.பி.,க்களும், முக்கிய நிர்வாகிகளும் இருந்தனர். ஆனால், நேற்று நடந்த பொதுக்குழுவில், மத்திய அமைச்சரவையில் காலியாக உள்ள கேபினட் அமைச்சர் பதவியிடங்களை நிரப்புவது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதனால், அமைச்சர் பதவி எதிர்பார்ப்பில் இருந்த கட்சி எம்.பி.,க்களும், அவரது ஆதரவாளர்களும் ஏமாற்றம் அடைந்தனர்.