கவர்னர் வேண்டாம் என்ற விஜய் எதற்கு அவரை சந்திக்க வேண்டும்? நடிகர் சரத்குமார் பேட்டி
சென்னை: ''மதுரை அரிட்டாபட்டி மக்களுக்கு அமைதி கிடைக்க காரணம் அண்ணாமலை. கவர்னரே வேண்டாம் என்று சொன்ன விஜய், எதற்கு அவரைச் சந்திக்க வேண்டும்?'' என, நடிகர் சரத்குமார் கேள்வி எழுப்பினார்.தமிழக பா.ஜ., தலைமை அலுவலகத்தில் நடந்த, குடியரசு தின விழாவில் பங்கேற்ற பிறகு, அவர் அளித்த பேட்டி: குடியரசு தினமானாலும், சுதந்திர தினமானாலும், தேசப்பற்றை மக்களிடையே எடுத்து செல்லும் நாளாகவே, அதை பார்க்கிறோம். மிக விரைவில், தேசத்தை பொருளாதார ரீதியாக, முதல் இடத்திற்கு எடுத்து செல்வதற்கான, பல திட்டங்களை வகுத்து செல்படுத்திக் கொண்டிருக்கின்றனர். பா.ஜ., நிர்வாகிகள், தொண்டர்கள் கடுமையாக உழைத்து, வரும் 2026 சட்டசபைத் தேர்தலில், ஒரு சிறந்த ஆட்சியை தமிழகத்தில் ஏற்படுத்துவோம் என, சபதம் ஏற்போம். டங்ஸ்டன் விவகாரத்தில், அரிட்டாபட்டி மக்களுக்கு, அமைதி கிடைத்து விட்டது. இதற்கு காரணம் அண்ணாமலை, இதை நேரில் பார்த்து முடித்து வைப்பதாக சொன்னார். அவ்வாறே செய்துவிட்டார். நடிகர் விஜய் குறித்து, நான் பெரிதாகப் பேசுவதில்லை. அவர் களத்தில் ஆறு மாதம் பயணித்த பிறகு, கொள்கை ரீதியாக அவரால் தமிழகத்தை வேறு பாதைக்கு, எடுத்து செல்ல முடியுமா, முடியாதா என்பதை பார்ப்போம். அவரது கொள்கை எதிரி பா.ஜ., எனக் கூறிவிட்டார் எனில், எதற்காக எதிர்க்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. அவரது கட்சியின் முதல் மாநாட்டில், தமிழக கவர்னர் இருக்கக்கூடாது என்றார். பின்னர் எதற்காக, அவரை நேரில் பார்க்க வேண்டும்? இதிலே, தெரிந்துவிட்டது அவரது கொள்கை! இவ்வாறு, அவர் கூறினார்.