| ADDED : நவ 25, 2025 06:44 AM
சியோல்: தென் கொரியாவில், சமூக வலைதளங்கள் வாயிலாக சிக்கிய சிறார் உட்பட, 261 பேரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தென் கொரியாவின் சியோலைச் சேர்ந்தவர் கிம் நோக்-வான், 33. இவர், கடந்த 2020 முதல், 'டெலிகிராம், பேஸ்புக்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியாகும் பெண்களின் கவர்ச்சி புகைப்படங்களை சேகரித்து வந்துள்ளார். அவர்களது அந்தரங்க விஷயங்களை தெரிந்துகொண்ட கிம், அவர்களின் அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவேன் என மிரட்டி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி உள்ளார். அவரது வலையில் சிக்கிய, 14 சிறார்கள் உட்பட, 261 பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோவாக பதிவு செய்துள்ளார். நான்கு ஆண்டுகளில் சுமார் 1,700 ஆபாசப் படங்களையும், வீடியோக்களையும் கிம் நோக் தயாரித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், சக ஊழியர்களை மிரட்டி பணம் பறித்துள்ளார். பாதிக்கப்பட்ட ஒருவர் அளித்த புகாரில் இந்த விஷயம் வெளியே வர கடந்த ஜனவரி மாதம் கிம் நோக்-வானை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் சியோல் நீதிமன்றம் நேற்று அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. கிம்முடன் தொடர்புடைய ஐந்து சிறுவர்கள் உட்பட மேலும் 10 பேருக்கு 2 முதல் 4 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.