டாக்காவங்கதேசத்தில் மாணவர்கள் மற்றும் ஆளும் அவாமி லீக் கட்சியினருக்கு இடையே நேற்று ஏற்பட்ட மோதலில், 14 போலீசார் உட்பட 92 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.நம் அண்டை நாடான வங்கதேசத்தில், சுதந்திர போராட்டத்தின் போது உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு வேலை மற்றும் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு வழங்குவதை கண்டித்து, சமீபத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். கடந்த வாரம் நடந்த போராட்டங்களில் ஏற்பட்ட வன்முறையில், 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில், 'பாகுபாடுக்கு எதிரான மாணவர் இயக்கம்' என்ற பெயரில், மாணவர்கள் மீண்டும் போராட்டத்தை துவக்கி உள்ளனர். முதலில் போலீசும், பிறகும் ராணுவமும் இந்தப் போராட்டங்களை தடுக்க முயற்சி செய்தன. மாணவர் போராட்டம்
தற்போது இந்த போராட்டம் அரசியலாக மாறியுள்ளது. முக்கிய எதிர்க்கட்சியான, பி.என்.பி., எனப்படும் வங்கதேச தேசியவாத கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மாணவர் போராட்டத்தை துாண்டிவிட்டதாக, ஆளும் அவாமி லீக் குற்றஞ்சாட்டியது. இதைத் தொடர்ந்து, அவாமி லீக் கட்சியின் மாணவர் பிரிவு நிர்வாகிகள் போராட்டக்காரர்களுக்கு எதிராக களமிறங்கினர்.இதனால், ஆளுங்கட்சிக்கும், மாணவர்களுக்கும் இடையேயான மோதலாக இந்தப் போராட்டம் உருமாறி உள்ளது. இந்நிலையில், டாக்கா உட்பட நாட்டின் பல பகுதிகளில் போராட்டம் நேற்று மிகத் தீவிரமானது. பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரி, போராட்டக்காரர்கள் பேரணி நடத்தினர். இதை எதிர்த்து, ஆளுங் கட்சியின் மாணவர் பிரிவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், இரு தரப்புக்கும் இடையே பல இடங்களில் மோதல் வெடித்தது. இரு கட்சிகளின் நிர்வாகிகள் வீடுகள், சொத்துகளுக்கு தீ வைப்பது, கல்வீசி தாக்குவது என, வன்முறை சம்பவங்கள் நடந்தன.மேலும், போராட்டக்காரர்களுக்கு எதிராக போலீஸ் மற்றும் ராணுவமும் களமிறங்கியது. இதனால் நேற்று ஒரு நாளில், 14 போலீசார் உட்பட, 92 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஊரடங்கு
இதைத் தவிர, 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து நேற்று மாலை முதல், காலவரையற்ற ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. டாக்காவில் மட்டுமல்லாமல் நாடு முழுதும் பல இடங்களில் வன்முறைகள் அரங்கேறின. இதற்கிடையே சட்டோகிராமில், கல்வி அமைச்சர் போஹிபுல் ஹாசன் சவுத்ரி நோபெல், மேயர் கரீம் சவுத்ரி, உள்ளூர் எம்.பி., உள்ளிட்டோரின் வீடுகளை, போராட்டக்காரர்கள் சேதப்படுத்தினர். இதற்கு பதிலடியாக, பி.என்.பி., கட்சியின் நிர்வாகிகள் வீடுகளில், அவாமி லீக் கட்சியினர் சேதப்படுத்தினர்.முன்னதாக டாக்காவில் உள்ள பங்கபந்து ஷேக் முஜீப் மருத்துவப் பல்கலைக்குள் அடையாளம் தெரியாத சிலர் நுழைந்துஉள்ளனர். கைகளில் தடி உள்ளிட்ட ஆயுதங்களுடன் நுழைந்த அவர்கள், அங்கிருந்த கார்கள், ஆம்புலன்ஸ்கள், பைக்குகளை சேதப்படுத்தினர்.இதனால், பல்கலை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் பதற்றம் ஏற்பட்டது. போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், அமைதி பேச்சுக்கு அரசு அழைப்பு விடுத்தது. பதற்றம்
ஆனால், அதை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் நிராகரித்துள்ளனர். பள்ளி, கல்லுாரி, பல்கலைகள், மதரசாக்களில் உள்ள மாணவர்களை போராட்டத்தில் ஈடுபடும்படி, போராட்டக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.இதற்கிடையே, 'வீதிகளில் குவிக்கப்பட்டுள்ள ராணுவத்தினரை அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும்; இல்லையெனில், மிகப் பெரிய பாதிப்பும், பதற்றமும் ஏற்படும்' என, வங்கதேசத்தின் முன்னாள் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பயங்கரவாதிகள் -- பிரதமர் ஆவேசம்!
போராட்டம் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், தேசிய பாதுகாப்பு குழு கூட்டத்தை, பிரதமர் ஷேக் ஹசீனா நேற்று நடத்தினார். இதில், நாட்டின் நிலவரம் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.இது குறித்து ஷேக் ஹசீனா கூறியுள்ளதாவது:போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மாணவர்கள் அல்ல; அவர்கள் பயங்கரவாதிகள். நாட்டின் சொத்துகளை சேதப்படுத்துபவர்கள், பதற்றமான சூழ்நிலையை உருவாக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை, மக்கள் நிராகரித்து, அவர்களை ஒடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.
டாக்கா நோக்கி பேரணி
கலவரத்தின்போது உயிரிழந்தவர்களில் அதிகபட்சமாக 22 பேர் சிராஜ்கஞ்ச் பகுதியை சேர்ந்தவர்கள். இதில், 14 பேர் போலீசார். போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று முதல் மூன்று நாட்களுக்கு அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்க பொது விடுமுறை அளித்து வங்கதேச அரசு அறிவித்துள்ளது.போராட்டக்காரர்களின் செயல்பாடுகளை முடக்கும் நோக்கில் இணைய சேவையை தற்காலிகமாக நிறுத்தும்படி மொபைல் ஆப்பரேட்டர்களுக்கு அரசு உத்தரவிட்டு உள்ளது. இதேபோல் பேஸ்புக், வாட்ஸாப் போன்ற சமூக வலைதள செயல்பாடுகளுக்கும் வங்கதேச அரசு தடை விதித்துள்ளது.போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர் அமைப்பினர் சார்பில் தலைநகர் டாக்காவை நோக்கி இன்று பேரணி நடத்த திட்டமிட்டு உள்ளது. இதில் பங்கேற்க வருமாறு மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிட்டகாங் மருத்துவக் கல்லுாரியில் போராட்டத்தில் ஈடுபட்ட 42 பேர் குண்டுகாயங்களுடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.