உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஈராக்கில் அமெரிக்க படைகள் ஆண்டு இறுதிவரை தங்க அனுமதி

ஈராக்கில் அமெரிக்க படைகள் ஆண்டு இறுதிவரை தங்க அனுமதி

பாக்தாத் : ஈராக்கில், தற்போதுள்ள அமெரிக்கப் படைகள், இந்தாண்டு இறுதி வரை தங்கியிருந்து, ஈராக் படைகளுக்கு பயிற்சி அளிப்பதற்கு அந்நாட்டு அரசியல் தலைவர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். ஈராக்கில், போர் முடிந்த பின் எட்டு ஆண்டுகளாக அமெரிக்கப் படைகள் தொடர்ந்து தங்கியுள்ளன. இது, அந்நாட்டின் அரசியல் தலைவர்களிடையே கருத்து முரண்பாடுகளை எழுப்பியது. இந்நிலையில், 2008ல் மேற்கொண்ட இருதரப்பு ஒப்பந்தத்தின்படி, 2011 இறுதி முதல், அமெரிக்கப் படைகள் ஈராக்கில் இருந்து வெளியேற வேண்டும் என உறுதி செய்யப்பட்டது.

இதற்கிடையில், கடந்த சில மாதங்களாக ஈராக்கில் பயங்கரவாதத் தாக்குதல் அதிகரித்து வருவதை அடுத்து, அமெரிக்கா தன், 10 ஆயிரம் வீரர்கள் அங்கு தொடர்ந்து தங்கி, ஈராக் படைகளுக்கு பயிற்சி அளிப்பர் என, தானாக முன்வந்து தெரிவித்தது. அமெரிக்காவின் இந்த அறிவிப்பு, ஈராக் தலைவர்களிடையே மீண்டும் கருத்து முரண்பாடுகளை எழுப்பியது. நேற்று முன்தினம், அரசு மற்றும் அரசியல் தலைவர்களிடையே நடந்த ஐந்து மணி நேர பேச்சில், இந்தாண்டின் இறுதி வரையில் அமெரிக்கப் படைகள் ஈராக்கில் தங்கியிருக்க அனுமதி வழங்கலாம் என, முடிவெடுக்கப்பட்டது.

இம்முடிவை செய்தியாளர்களிடம் அறிவித்த ஈராக் வெளியுறவு அமைச்சர் ஹோஷ்யார் ஜெபாரி, 'அமெரிக்கப் படைகள் இங்கு இன்னும் நீண்ட நாள் தங்குவதில் பல பிரச்னைகள் உள்ளன. எனினும், இந்தாண்டின் இறுதியில் அமெரிக்கப் படைகள் ஈராக்கில் இருந்து வெளியேற வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது' என்றார். பாக்தாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகம், ஈராக்கின் முடிவை பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ