ஒரு பள்ளி ஒரு பெருமை ஒரு கோரிக்கை
'ஆணுக்கு 10ம் வகுப்பு, பெண்ணுக்கு 8ம் வகுப்பு போதும்' என்று சொல்ல வைக்கும் பொருளாதார சூழலில் வாழும் மக்கள்; இம்மண்ணில் அரை நுாற்றாண்டுகளை கடந்து நிற்கிறது திண்டுக்கல், நத்தம், மாமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி! பள்ளி: குழந்தை தொழிலாளர்களாக மாணவர்கள் மாறுவதையும், குழந்தை திருமணங்கள் நிகழாமல் தடுப்பதையும் தீவிர இலக்காகக் கொண்டு, மக்களின் அறியாமை இருளைப் போக்க போராடி வருகின்றனர் இப்பள்ளி ஆசிரியர்கள். நான்கு வகுப்பறைகள், 10 கணினிகள், 'ஸ்மார்ட் போர்ட்' ஆய்வகம்... இவையே, 210 மாணவர்களின் கல்வி ஆதாரம்! பெருமை: 'இந்த பள்ளிதான் எனக்கு ஆங்கி லம் பயிற்றுவித்தது. கூலி வேலைக்கு செல்லும் என் அம்மாவிற்கு ஆங்கிலத்தில் பெயர் எழுதவும், கையெழுத்து இடவும் கற்றுக் கொடுத்திருக்கிறேன். 'பட்டதாரி பெண்கள் இல்லாத ஊர்' எனும் எங்கள் கிராமத்தின் மீதான கறை போக்குவது என் பெரும் கனவு!' அ.நித்ய ரூபிணி, 8 ம் வகுப்பு மாணவி கோரிக்கை: 'இங்கு, 2011ல் 5 ம் வகுப்பு பயின்ற மாணவன் நான். பத்தாம் வகுப்புக்காக வீட்டில் இருந்து 6 கி.மீ., நடந்து செல்ல வேண்டியிருந்ததால் படிப்பை கைவிட்டு மரம் வெட்ட சென்று விட்டேன். எங்கள் கிராமத்தின் இந்நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தினால் இடைநிற்றல் தவிர்க்கப்படும்!'மு.குமார், முன்னாள் மாணவர்