உள்ளூர் செய்திகள்

மதுவிது (மலையாளம்)

'கலகல' பூக்களுடன் கல்யாண மாலை 'பெண்கள் இல்லாத, ஐந்து ஆண்கள் உள்ள உங்கள் குடும்பத்தில் திருமண சம்பந்தம் செய்து கொள்ள விரும்பவில்லை' - பெண் கேட்டுப் போன 28 இடங்களிலும், அம்ருத்ராஜிடம் சொல்லப்படும் பதில் இது. சினேகா உடனான அவனது நட்பு காதலாகி திருமணம் முடிவாக, 'கடவுள் வைச்சான் பாரு ஆப்பு' எனும் வகையில் ஒரு திருப்பம். அம்ருத்ராஜ் கழுத்தில் கல்யாண மாலை விழுந்ததா? வழக்கம்போல மிருதுவான கதை சொல்லலுக்கு ஏற்ற கதைக்களத்தைப் பிடித்து, அதன் துணைக்கு 'காமெடி'யை இணைத்துக் கொண்டு திரைக்கதை எழுதப்பட்டிருக்கும் இன்னொரு மலையாள திரைப்படம். நாளை, தான் பார்க்க உள்ள 28வது பெண் பற்றி சினேகாவிடம் அம்ருத்ராஜ் பகிர்கையில் அவளது கண்களில் மின்னி மறையும் காதலும், தன் மீதான சினேகாவின் காதல் பற்றி அறிய வருகையில் அம்ருத்ராஜ் முகத்தில் கோலமிடும் உணர்ச்சிகளும், 'மீண்டும் அக்காட்சிகள் மலராதா' எனும் ஏக்கம் விதைக்கின்றன! கிரி படத்தில் தன் புது வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க முடியாத மதன்பாப் போல, தன் இல்லற வாழ்விற்காக கட்டில் 'ஆர்டர்' கொடுத்து, அது 'டெலிவரி' ஆகும் தருணத்தில் எல்லாம் அம்ருத்ராஜ் எதிர்கொள்ளும் துர்பாக்கிய நிலையே இச்சிரிப்பு மலர்ச்சரத்தில் அதிக மணம் வீசும் மலர்! காமெடியையும், குடும்ப சென்டிமென்டையும் சரிவர கலந்ததோடு மட்டுமின்றி, கதாபாத்திர தேர்வும் சிறப்பாக இருக்கிறது; பிரம்மச்சாரி சித்தப்பா காதலில் விழுவது, சம்பந்தியிடம் அம்ருத்ராஜின் அப்பா இனிப்பு நீட்டுவது உள்ளிட்ட இடங்கள் நடிகர்கள் தேர்வில் இயக்குனரின் திறமையை பறைசாற்றுகின்றன! மனித மனதின் குறை ஏற்க வலியுறுத்துவது, மன பலவீனங்களை பலமாக உணர வைப்பது உள்ளிட்ட வழக்கமான மலையாள சினிமா நறுமணங்கள் இல்லாதது இப்படைப்பின் சிறு குறை; அதேபோல், மத்திய வயது காதல் குறித்த காட்சிகளில் கவிதை தீட்ட வாய்ப்புகள் இருந்தும் அவற்றை தவற விட்டிருக்கின்றனர்; இவை இரண்டையும் கழித்துப் பார்த்தால் மனம் ததும்பி நிற்காதே தவிர நிறைந்திருக்கும். ஆக... 'நல்லதே நடக்கும்' என்றதையும் இன்றுள்ளதையும் ஒப்பிடும் மூளைகளுக்கு இது மிகச்சாதாரண படம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !