சிலை வியக்கும் சிற்பி
'நந்து என் பொண்ணு' என்றபடியே அணைத்துக் கொள்கிறார் ராஜ ராஜேஸ்வரி. அந்த அணைப்பில் இருந்த படியே, 'என் ஆறு வயசுல இருந்து இவங்களை 'அம்மா'ன்னு தான் நான் கூப்பிடுறேன்' என்கிறார் படிப்பாளி நந்து. இந்த வார சிலை: ஜெ.நந்தனா ராஜ் ஸ்ரீ, 10ம் வகுப்பு சிற்பி: கி.ராஜ ராஜேஸ்வரி வீரவேல், ஆசிரியை கருவறை: வேல்ஸ் வித்யாலயா, அம்பாசமுத்திரம், திருநெல்வேலி. இது என்னமாதிரியான உறவு நந்து? முதல் வகுப்பு சேர்க்கைக்கு போயிருந்த என் கன்னத்தை செல்லமா கிள்ளி, 'நந்துன்னு உன்னை கூப்பிடவா'ன்னு இந்த அம்மா கேட்டாங்க; அன்னைக்கு தொடங்குச்சு இந்த பந்தம். பெரிய பதவியில இவங்க இருக்குறதை நான் வளர வளர தெரிஞ்சுக் கிட்டாலும், இன்னைக்கும் என் முதல் தோழி இந்த அம்மா தான்! 'பள்ளிக்குழுவின் துணை தலைவர் ஆகிவிட வேண்டும்' என்பது சிறுவயதிலிருந்தே நந்துவின் ஆசை. இதற்காக, மேடைப் பேச்சு திறனை திறம்பட வளர்த்திருக்கிறார். அனைவரிடமும் நன்கு பழகி இரு க்கிறார். இறைவணக்கம், தேசியகீதம் பாடும் 10 பேர் குழுவில் பங்கெடுத்திருக்கிறார்; ஒன்பதாம் வகுப்பில் இவரது ஆசை நிறைவேறி இருக்கிறது. ஆக... தலைமைப்பண்பு வசமாகி விட்டது; அப்படித்தானே? 'மாணவர்களுக்கு தோள் தந்து பள்ளிக்கு பெருமை சேர்க்குற பதவி இது; எந்த சூழல்லேயும் இந்த பதவியை தவறா பயன்படுத்திடாதே. 'நந்தனா அக்காகிட்டே பிரச்னையை சொன்னா தீர்வு கிடைக்கும்'ங்கிற நம்பிக்கையை மாணவர்களுக்கு ஏற்படுத்து!' - இது, தலைமைப் பண்புக்கு என்னை தயார்படுத்த ராஜேஸ்வரி அம்மா எனக்கு சொன்னது. 'ஒரு வருஷம் முடிஞ்சிருச்சு; பதவி கைமாறியே ஆகணும்; இதுல, கண் கசிய வேண்டிய அவசியமில்லை. உன் பதவி காலத்துல உன் செயல் பாடு அருமை. மனசளவுல இன்னும் நீ பலமாகணும்!' - அம்மா எனக்கு இதை எப்போ சொல்லி இருப்பாங்கன்னு உங்களுக்கு நல்லா புரிஞ்சிருக்கும். ஆக... நான் இன்னும் வளரணும். கடந்த அன்னையர் தினத்தில், 'எனக்குப் பிடித்த பூவான உங்களை வாட விடாமல், 'அன்பு' எனும் நீரால் வளர்க்கிறேன்' என ஆங்கிலத்தில் எழுதி நந்து பரிசளித்த வாழ்த்து, ஆசிரியை ராஜ ராஜேஸ்வரி யிடம் இன்னும் பத்திரமாய் இருக்கிறதாம். அதேபோல், நந்தனாவின் ஆறு வயதில் ராஜ ராஜேஸ்வரி பரிசளித்த 'பிஷ் மேக்னட்' இன்னும் நந்து வீட்டில் பாதுகாக்கப்படுகிறதாம். அன்னையாக இருக்கும் ஆசிரியைக்கும், மகளாகி நிற்கும் மாணவிக்கும் வாழ்த்துகள். உளியின் மொழி'கல்வி அவசியம்தான்; ஆனா, ஒழுக்கம்தான் உன்னை உயர்த்தும்னு மாணவர்களுக்கு சொல்லிட்டே இருக்குறேன். பிரச்னைகளை தைரியமா கையாள அறிவுறுத்துறேன். 'உணர்வுப்பூர்வமான பிரச்னைகள்ல சுயமா முடிவெடுக்கிறது இந்த வயசுல பெரும்பாலும் சரியா அமையாது; பெற்றோர், ஆசிரியர் வழிகாட்டுதல் அவசியம்'னு நந்து உட்பட என் எல்லா மகள்களுக்கும், மகன்களுக்கும் புரிய வைச்சிருக்கேன்!' கி.ராஜ ராஜேஸ்வரி வீரவேல், இயக்குனர்/ஆசிரியை