உள்ளூர் செய்திகள்

/ கனவு இல்லம் / ஆலோசனை /  காலி மனை வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

 காலி மனை வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

சொந்த ஊரை விட்டு வெளியூரில் வேலைக்காக குடியேறியவர்களில் பலர், புதிய ஊரில் நிரந்தரமாக தங்க வேண்டும் என்று நினைக்கின்றனர். இவ்வாறு, புதிய ஊரில் நிரந்தரமாக தங்க வேண்டும் என்றால், அங்கு சொந்த வீடு இருக்க வேண்டும் என்பது அவசியமாகிறது. தற்காலிக ஏற்பாடாக வாடகை வீடுகளில் வசிக்கும் பலரும், புதிய ஊரில் சொந்த வீடு வாங்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கின்றனர். ஆனால், சென்னை போன்ற நகரங்களில் சொந்த வீடு வாங்க வேண்டும் என்றால், அதற்கு ஏற்ற நிதி வசதி அடிப்படை தகுதியாக பார்க்கப்படுகிறது. இதனால், குறைந்த, நடுத்தர வருவாய் பிரிவினரால் சொந்த வீடு வாங்க முடியாத அளவுக்கு நிலைமை சென்றுவிடுகிறது. இத்தகைய சூழலில், மக்கள், நகரின் பிரதான பகுதிகளை தவிர்த்து புறநகர் அல்லது அதற்கு அப்பால் அடுத்த மாவட்டங்களில் காலி மனை வாங்குவதில் கவனம் செலுத்துகின்றனர். இதன்படி, காலிமனை வாங்கும் போது அதற்கான அங்கீகாரம், உரிமை தொடர்பான ஆவணங்கள் குறித்த முழுமையான ஆய்வு அவசியமாகிறது. முறையான அங்கீகாரம், வில்லங்கம் இல்லாத பத்திரம் போன்ற விஷயங்களில் ஆய்வு செய்து தெளிவு பெற்ற நிலையில், மனையின் அமைப்பு சார்ந்த விஷயங்களையும் மக்கள் கவனிக்க வேண்டும். நீங்கள் தேர்வு செய்யும், மனை முறையாக அங்கீகரிக்கப்பட்ட லே அவுட்டில் அமைந்துள்ளதா என்பது தொடர்பான விஷயங்களை பாருங்கள். முறையான லே அவுட் என்றால், ஒரு வரிசையில் அனைத்து மனைகளும் ஒரே மாதிரி அமைந்து இருக்கும். ஆனால், சில இடங்களில் வீட்டு மனை வகைப்பாட்டில் உள்ள பெரிய நிலத்தின் ஒரு பகுதியை வைத்துள்ளவர் அதை விற்க முன்வரலாம். இத்தகைய சூழலில், நீங்கள் வாங்கும் மனை இரண்டு பெரிய மனைகளுக்கு நடுவில் மிக சிறியதாக அமைந்துள்ளதா என்று பாருங்கள். இவ்வாறு, பெரிய மனைகளுக்கு நடுவில் அமைந்துள்ள சிறிய மனையை வாங்கினால், பிற்காலத்தில் அதில் வீடு கட்டுவது தொடர்பாக பிரச்னை ஏற்படும். குறிப்பாக, பக்கத்தில் உள்ள மனையில் பெரிய அளவிலான குடியிருப்பு கட்டும் போது, உங்கள் மனைக்கு பிரச்னைகள் ஏற்படும். பெரிய மனைகளில் அதிக உயரத்துக்கு கட்டடங்கள் கட்டப்படும் நிலையில், உங்கள் மனையில் அஸ்திவாரம் போட்டு சாதாரண கட்டடம் கட்டுவதானாலும், பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. இது மட்டுமல்லாது, பெரிய மனைகளை வாங்குவோர், உங்கள் மனையை குறைந்த விலைக்கு வாங்க நெருக்கடி கொடுக்கும் வாய்ப்பு உள்ளது. இத்தகைய மனைகளை வாங்கும் போது எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்களை கருத்தில் கொண்டு செயல்படுவது நல்லது. குறிப்பாக, அந்த பகுதியில் சாலை விரிவாக்கம் போன்ற திட்டங்கள் வந்தால், அது உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்கின்றனர் நகரமைப்பு வல்லுனர்கள். பெரிய மனைகளுக்கு நடுவில் அமைந்துள்ள சிறிய மனையை வாங்கினால், பிற்காலத்தில் அதில் வீடு கட்டுவது தொடர்பாக பிரச்னை ஏற்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை