டாக்டரின் டைரி குறிப்பு
ஏப்ரல் 15, 2014 சுரேஷின் அக்கா மகள் தான் மாலா. அவளையே திருமணம் செய்ததால் சொந்தம் விட்டுப் போகவில்லை என, சுரேஷின் குடும்பம் மகிழ்ந்தது. இரு குடும்பமும் சந்தோஷமாக வாழ்ந்தனர். இதற்கிடையில் இரண்டு ஆண்டுகள் கடந்தன. மாலாவும் தாயானார்; வரப்போகும் தங்களின் வாரிசை நினைத்து ஏங்க ஆரம்பித்தனர். அதுவும் இரட்டைக் குழந்தை. நாட்கள் இவ்வாறே உருண்டோடின. குழந்தைகளுக்கு நான்கு வயதாகியது. மூத்தவள் பெயர் மாலினி; இளையவள் சுஜிதா. சுஜிதா படுசுட்டி; ஓடியாடி விளையாடியும், தொந்தரவுகள் பல கொடுத்துக் கொண்டும் இருந்தாள். இதற்கு நேர் எதிர் மாலினி. சுறுசுறுப்பாகவே இருக்க மாட்டாள். விளையாட செல்ல மாட்டாள். சாதாரண குழந்தையின் செய்கைகளில் இருந்து மாறுபட்டிருந்தாள். எனவே, பொது மருத்துவரிடம் சென்றனர். அவரோ பொதுவான சில பரிசோதனைகள் செய்து, பிரச்னை ஒன்றும் இல்லை என்று கூறிவிட்டார். இதனை சுரேஷின் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே, மாலினியின் மரபணுவை பரிசோதனை செய்ய, என்னைத் தேடி திருச்சியிலிருந்து மாலினியையும் அழைத்துக் கொண்டு சென்னை வந்தார். பரிசோதனை முடிவுகளால், சுரேஷின் இதயத்தில் இடி விழுந்தது. காரணம் மாலினிக்கு, 'தாலசீமியா' இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குழந்தைகளுக்கு பிறவியிலேயே ஏற்படும் ஒரு வகையான ரத்த சோகை நோய். தாலசீமியா பாதிப்பால், ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைந்துவிடும். நுரையீரலில் இருந்து மற்ற பகுதிகளுக்கு ஆக்சிஜன் செல்வதில் தடை ஏற்படும். இதனால் மாதாமாதம் உடலில் ரத்தம் ஏற்றிக் கொண்டே இருக்க வேண்டும். இப்படி தொடர்ந்து ரத்தம் ஏற்றுவதால், பலவிதமான பக்க விளைவுகள் ஏற்படும். உதாரணத்திற்கு, ரத்தத்தில் இரும்புச்சத்து அதிகரிப்பால், மஞ்சள் காமாலை ஏற்படும். சுறுசுறுப்பாக இருக்க மாட்டார்கள். சரியாக சொல்வதென்றால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும். இக்கொடிய நோய் வரக் காரணம் ஊட்டச்சத்து குறைபாடோ, சுற்றுச்சுழல் மாசுபாடோ கிடையாது. காலம்காலமாக நாம் போற்றிப் பாதுகாத்து வரும், 'எண்டோகேமி' எனப்படும், சொந்தத்திற்குள் திருமணம் செய்வதால் ஏற்படும் குரோமோசோம்களின் கோளாறு தான். ஆணின் உயிரணுக்களும், பெண்ணின் கருமுட்டையும் இணையும் போது, இருவரின் மரபணுக்களும் இணைகின்றன. அதில் இருவரிடமும் இருக்கும் குறைபாடுள்ள மரபணுக்களும் இணைகின்றன. பொதுவாக குறைபாடுடைய அணுக்களே ஆதிக்க குணம் கொண்டவை. இந்த குறைபாடு உடைய அணுக்களே நிரந்தர ஊனங்கள், குணப்படுத்த இயலாத நோய்களை உருவாக்குகின்றன. மரபணு மூலம் ஏற்படக் கூடிய, 3,000 வகையிலான நிரந்தர ஊனங்களோடு, சில வகையான மருத்துவ ஊனங்கள் தமிழகத்திலும், ஆந்திராவிலும் மட்டுமே இருப்பதாக, உலக சுகாதார நிறுவனம் சொல்கிறது. மாதம் தவறாமல் மாலினிக்கு ரத்தம் ஏற்றுகிறோம். ஆனால், பக்கவிளைவுகளால் மாலினி மிகவும் கஷ்டப்படுகிறாள், மருத்துவ சக்திக்கு அப்பாற்பட்ட இறைவன் தான், மாலினியை காப்பாற்ற வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.அரவிந்த் ராமநாதன்மரபணு ஆராய்ச்சியாளர். ஸ்ரீபாலாஜி பொது மற்றும் பல் மருத்துவமனை, சென்னை.96000 24619