டாக்டரின் டைரி குறிப்பு
டாக்டரின் டைரி குறிப்பு : மே 9, 2016தினேஷ், தனியார் வங்கி ஒன்றில் மேலாளராக பணிபுரிகிறார். அம்மா இறந்த பின், தன் மனைவியிடம், 'இனி அப்பாவிற்கு எல்லாமே நாம் தான்' என்று சொல்ல, மருமகளும் அவ்வளவு அன்பாக மாமனாரை கவனித்துக் கொண்டார். ஆனாலும் தினேஷின் அப்பா, பிள்ளைக்கு உதவியாக இருக்க எண்ணி, மார்க்கெட் போவது, மின் கட்டணம் செலுத்துவது என, செய்து வந்தார்.சில மாதங்களாக, அப்பாவின் நடவடிக்கையில் வித்தியாசத்தை உணர்ந்தார், தினேஷ். வழக்கமாக செய்யும் வேலைகளை செய்ய முடியவில்லை. பேசுவதிலும் சிரமம் இருந்தது; நடை தள்ளாடியது. இதனால் தன் தந்தைக்கு என்ன ஆனதோ என வருத்தப்பட்டு, மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். பரிசோதனையில் 'பார்கின்சன்' நோய் என்று உறுதிபடுத்தினார், டாக்டர். சில நாட்களிலேயே அவரின் உடல்நிலை மீண்டும் மோசமானதால் என்னிடம் அழைத்து வந்தார். இந்நோய் நரம்பு மண்டலத்தைப் பாதித்து, உடல் அசைவுகளை பாதிக்கிற நடுக்கவாத நோய். நரம்பியல் அறிகுறிகளை பரிசோதித்து, இந்நோய் உறுதி செய்யப்படுகிறது. நியூரான் எனும் நரம்புத் திசுக்கள் பாதிப்பால் வருவது பார்கின்சன். இந்த நோயால் மூளையில், 'சப்ஸ்டான்ஷியா நிக்ரா' என்ற பகுதியில் உள்ள நரம்புத் திசுக்கள் அழிகின்றன. அந்த இடத்தில் தான் நரம்பு செயல்பட்டு, டோப்பமைன் என்று சொல்லக்கூடிய புரதம் உருவாகிறது. இது மனிதனின் அசைவுகளையும், செயல்பாடுகளையும் கட்டுப்படுத்துகிறது; இது குறைவதாலும் இந்த நோய் ஏற்படும். பார்கின்சன் நோயால், உடல் துரிதமாக இயங்கும் நிலை குறையும்; முகபாவனைகள் குறையும். பல் தேய்ப்பதில், நடப்பதில், பேசுவதில் சிரமம் ஏற்படும்; தசைகள் இறுகி காணப்படும். நிமிர்ந்து நிற்க இயலாத நிலை உண்டாகும். உடல், பின்னால் சரிவதற்கும் வாய்ப்பு உண்டு. நாற்காலியில் இருந்து எழுந்திருக்கும் போதோ, நிற்கும் போதோ, திடீரென்று விழுவதற்கு வாய்ப்புண்டு. ஒரு செயல்பாட்டை சீராக செய்வதில் சிரமம் இருக்கும். தூக்கத்தில் குறைபாடு, மனச்சோகம் போன்றவை காணப்படலாம். இந்நோய் பொதுவாக, 60 வயதுக்கு மேல் வரும். இந்நோயாளிகள் சாப்பிடும் போது, உடன் யாராவது கட்டாயம் இருக்க வேண்டும். காரணம், தசைகள் சரியாக வேலை செய்யாததால் புரை ஏறி, நோயாளி இறக்க வாய்ப்புண்டு. பார்கின்சனால், நரம்புகள், தசைகள் பாதிக்கப்படும். நுரையீரல் தசைகள் சுருங்குவதால் மூச்சுத்திணறல் ஏற்படும். எனவே, 'ட்ரக்யாஸ்டமி' என்ற முறையில், தொண்டையில் சிறு துளையிட்டு அங்கிருக்கக் கூடிய நச்சு நீரினை வெளியேற்றிவிட்டால், நோயாளி சுவாசிப்பதில் சிரமம் இருக்காது. முறையான மருத்துவ சிகிச்சையால், தினேஷின் அப்பா இயல்பு நிலைக்கு திரும்பினார். பார்கின்சனை முற்றிலும் குணப்படுத்த இயலாது என்றாலும் அதனால் வரும் பாதிப்புகளை வலி நிவாரணம் மற்றும் ஆதரவு சிகிச்சையின் மூலம் சரி செய்யலாம்.ரிப்பப்ளிகா ஸ்ரீதர் வலி நிவாரணம் மற்றும் ஆதரவு சிகிச்சை நிபுணர்.சென்னை.93810 16588