உள்ளூர் செய்திகள்

டாக்டரின் டைரி குறிப்பு

நவ., 20, 2016: அடுத்த மாதம், அப்துலுக்கு திருமணம்; அழைப்பிதழ் கொடுக்க வந்திருந்தனர், அப்துலின் பெற்றோர். அப்துலை, முதலில் சந்தித்த நாளை மறக்கவே முடியாது. அப்துலின் தந்தை, திண்டிவனத்தில் விவசாயம் பார்க்கிறார். அப்துலுக்கு, ரகுமான் என்ற தம்பி உண்டு. அப்துல், கல்லுாரியில் படிக்கையில், அவன் தம்பி, 9ம் வகுப்பு படித்து வந்தான். அப்போது, அப்துலின் தம்பிக்கு, திடீரென கல்லீரல் செயலிழப்பு ஏற்பட்டது. நேற்று வரை நன்றாக இருந்தவனுக்கு, திடீரென்று என்ன ஆனது என தெரியாததால், குடும்பமே குழம்பித் தவித்தது. இது போன்ற பாதிப்பு, 'ஹெபடைட்டிஸ்' வைரஸ் பாதிப்புள்ளவர்களுக்கு வரும். காசநோய் மற்றும் வலிப்பு நோய்க்காக மருந்து எடுத்துக் கொள்பவர்களுக்கு, மருந்துகளின் பக்கவிளைவுகளால், கல்லீரல் பாதிப்பு ஏற்படும். அதோடு, தற்கொலை எண்ணத்துடன், எலி மருந்து எடுத்துக் கொள்வதாலும், இப்பிரச்னை ஏற்படும். இந்த எலி மருந்து, பவுடராகவும், பேஸ்ட் வடிவத்திலும் கிடைக்கிறது. பொதுவாக, விளை நிலங்களில் பயிரிடப்படும் பயிர்களை, எலிகள் பாழாக்கி விடுவதால், உணவுப் பொருட்களில், எலி மருந்தை தடவி, விவசாயிகள் வைத்துவிடுவர். இதை உண்ட எலி, உடனடியாக சாகாமல், குறைந்தது, இரண்டு நாட்கள் உயிரோடிருந்து பின் இறந்துவிடும். மனிதர்கள் அரளி விதை, சயனைட், துத்த நாகம் போன்ற மருந்துகள், சாப்பிட்ட உடனே இறந்துவிடுவர். ஆனால், எலி மருந்தை சாப்பிட்டால், பாதிப்பின் அறிகுறி தெரியவே, இரண்டு நாட்களாவது ஆகும்.அதோடு, ரத்த பரிசோதனைகள் எடுத்தாலும், முடிவுகளில் நார்மல் என்றே தெரிய வரும். இப்பாதிப்பை, 'மெக்ரோசிஸ்' என்பர். கல்லீரல் முழுவதுமாக செயலிழந்து போவதால், ரத்தம் உறையும் தன்மை இல்லாமலேயே போய்விடும். ரத்தம் உறையாமை நிலை ஏற்படு வதால், மூளை மற்றும் நுரையீரலில், உள்ளுக்குள்ளேயே ரத்தம் கசிய ஆரம்பிக்கும். இதுமட்டுமில்லாமல், 'ஹெப்பாட்டிக் என்செபெலோபதி' பாதிப்பும் ஏற்படும். அதாவது உளறுவது; அசாதாரண நடத்தை; சோர்ந்து துாங்கிய நிலையிலேயே கோமாவிற்கு சென்றுவிடுவது. இந்நிலை ஏற்படுவதால் நோயாளி இறந்து விடுவார். இதை தவிர்க்க, எலி மருந்தை அருந்தியது தெரிந்த உடன், உயர்நிலை சிகிச்சை அளிக்கப்படும் மருத்துவமனைகளை அணுக வேண்டும். மருத்துவர் உடனடியாக, 'ஆன்டிடோஸ்' மருந்துகளை கொடுக்க வேண்டும். நோயாளிக்கு பாதிப்பின் அறிகுறிகள் ஏதும் தெரியவில்லை என்றாலும், இந்த மருந்துகளை கொடுக்க வேண்டும். இதுபோல், தற்கொலை நிகழக்கூடாது என்றால், விவசாயிகள், பயிர்களை நாசம் செய்யும் எலிகளை அழிப்பதற்காக வாங்கி வரும் மருந்துகளை, உடனடியாக பயன்படுத்திவிட வேண்டும். இல்லையென்றால், தற்கொலைக்கு முயல்பவர்களுக்கு, இது உதவியாக இருக்கக்கூடும். ரகுமானின் விஷயத்திலும், இதுதான் நடந்தது. அப்பா திட்டியதால், இம்மருந்தை சாப்பிட்டு விட்டார். கடைசியில், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே செய்ய வேண்டும் என்பதால், அப்துல் தன் தம்பிக்கு, தன் கல்லீரலின் ஒரு பகுதியை கொடுத்து, தம்பி மேல் உள்ள பாசத்தை நிரூபித்துவிட்டார். ரகுமான் பூரண நலம் பெற்றாலும், வாழ்நாள் முழுவதும், சில மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.எஸ்.ஜாய் வர்க்கீஸ்,கல்லீரல் சிறப்பு நிபுணர், சென்னை.95660 62200


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்