டாக்டரின் டைரி குறிப்பு
ஆக., 28, 2016: வசுதா, பெயருக்கேற்றார் போல அழகான, 25 வயது பெண். சென்னை தரமணியிலுள்ள தொழில்நுட்ப பூங்காவில், மென்பொறியாளராக உள்ளார். திருமணத்திற்காக, அவர் பெற்றோர் வரன் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். மாப்பிள்ளையை தேர்வு செய்யும் பொறுப்பை, பெற்றோரிடம் விட்டுவிட்டதால், அவர்களுக்கும் மகிழ்ச்சி. இப்படியே சந்தோஷமாக சென்று கொண்டிருந்த நேரத்தில், அடிக்கடி வசுதாவின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டது; முதுகுத்தண்டில் வலி ஏற்பட்டது. பொதுவாக மென்பொறியாளர்கள், அதிக நேரம் உட்கார்ந்தே வேலை பார்ப்பவர்கள், ஆசிரியர்கள், டைப்பிஸ்ட், பளு துாக்கும் வேலை செய்பவர்கள், அதிக புத்தக சுமையை துாக்கும் பள்ளி மாணவர்கள், கர்ப்பிணிகள், இவர்களுக்கெல்லாம் முதுகுத்தண்டுவடத்தில் வலி ஏற்படும். இதற்கு பல சிகிச்சைகள் உள்ளன. பிசியோதெரபி, உடற்பயிற்சி, லேசர் தெரபி, வலி நிவாரணி மருந்துகள், முதுகுத்தண்டில் ஊசிகள் மூலம் மருந்துகள் ஏற்றுவது என, பல மருத்துவ முறைகள் உள்ளன. முதுகுத் தண்டுவடத்திலேயே எலும்புகள், டிஸ்க், தசை, மூட்டு இணைப்புகள், நரம்புகள், ஜவ்வு போன்ற உடல் உறுப்புகள் உள்ளன. இதில் எங்கு வேண்டுமானாலும் வலி ஏற்படலாம். வசுதாவின் பிரச்னையை அறிய, எம்.ஆர்.ஐ., பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் முதுகுத் தண்டுவடத்திலுள்ள எலும்பில் கட்டி ஒன்று இருப்பது தெரியவந்தது. கேன்சர் கட்டி பொதுவாக மற்ற பாகங்களுக்கு பரவும். ஆனால் வசுதாவிற்கு உள்ள கட்டி பரவாது. இதை, மருத்துவ மொழியில் 'பினைன் டியூமர்' என்பர். முதுகுத்தண்டிலுள்ள மற்ற பகுதிகளில் வியாதிகளால் வலி ஏற்படுவது சாதாரணம். ஆனால், எலும்பில் வந்திருக்கக்கூடிய கட்டியால் வலி வருவது அசாதாரணம். இப்பிரச்னைக்கு தீர்வு காண, அதற்குண்டான மருத்துவ நிபுணர்களை தேர்வு செய்வதே புத்திசாலித்தனம். வசுதாவிற்கு, நுண்துளை அறுவை சிகிச்சையின் மூலம் கட்டி அகற்றப்பட்டு, கட்டியை எடுத்த இடத்தில் சிமென்ட் வைத்து அடைத்துவிட்டோம்; அதற்கு, 'வெட்டிரோ ப்ளாஸ்டி' என்று பெயர். வசுதாவின் குடும்பத்தார் பயந்து விட்டனர். திருமணம் கூட இன்னும் நடக்கவில்லை; ஆனால், வசுதா மிகத் தைரியமாக இருந்தார். மேற்சொன்ன சிகிச்சை அளிக்கப்பட்டு, வசுதா நலமாக வீடு திரும்பிவிட்டார். நிறைய பேர் முதுகுத்தண்டில் வலி என்றால், உடனே தைலம் தடவுவது, தானே வலி நிவாரணி மருந்துகளை எடுத்துக் கொள்வது என, செயல்படக்கூடாது. தேர்ந்த அத்துறை சார்ந்த மருத்துவரை ஆலோசிப்பதே நல்லது. வசுதாவிற்கு திருமணம் நிச்சயமாகிவிட்டது. கட்டாயம் வரவேண்டும் என, அன்பு கட்டளை இட்டிருக்கிறார்.எஸ்.எஸ்.குமார் எலும்பு மற்றும் முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை சிறப்பு நிபுணர், சென்னை.96773 11333