கார முறுக்கை நொறுக்கலாம்... வறுத்த கடலையை கொரிக்கலாம்!
முதியோர் சந்திக்கும் பல பிரச்னைகளில், முக்கியமானது பல். பல் ஆட்டம் கொடுத்து விட்டால் வாழ்க்கையே ஆட்டம் கண்டு விடும் என்று, கவலைப்படும் அளவுக்கு முக்கியமானது இந்த உறுப்பு.ஏனெனில், அத்தனை நாட்களாக ஆசை, ஆசையாக சாப்பிட்ட உணவை சாப்பிட முடியாது. கண் முன் பேரன், பேத்திகள் முறுக்கை நொறுக்கும்போது, வேடிக்கைதான் பார்க்க முடியும்.இனி, நீங்களும் கடித்து சுவைக்கலாம் என நம்பிக்கை அளிக்கிறார், பல் மற்றும் முக சீரமைப்பு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் விஜய் ஆனந்த்.அவர் கூறியதாவது:நம் உடலில் நல்ல செரிமானம், நமது வாய் மற்றும் பற்களில் இருந்துதான் துவங்குகிறது. உணவு உமிழ் நீருடன் சேர்ந்து, நன்கு அரைத்து உண்பதால் நல்ல செரிமானம் ஏற்படுகிறது. இதில் பற்களின் பங்கு முக்கியம்.ஆனால் பற்கள்இல்லாத முதியோருக்கும் பற்கள் திரும்ப வைத்து, நினைத்ததை சாப்பிட முடியும். உடல் நலத்தை பெற முடியும். பல் பாதுகாப்பு என்பது குழந்தைகள், இளம் வயதினர் மட்டுமின்றி முதியோருக்கும் மிக அவசியம்.ஏனெனில், சர்க்கரை போன்ற இணை நோய்கள் முதிய வயதில் சற்று அதிகமாக காணப்படுவதால் பல், ஈறு நோய் (ஜின்ஜிவைட்டிஸ்) மற்றும் பற்களை சுற்றி உள்ள எலும்பு தேய்ந்து போக வாய்ப்புள்ளது.எனவே, ஆறு மாதத்திற்கு ஒரு முறை முதியவர்கள், பல் மருத்துவரிடம் பல் மற்றும் ஈறு பரிசோதனை செய்து கொள்வது முக்கியம். நவீன கால பல் மருத்துவத்தில் ஸ்கேன்கள் மற்றும் எக்ஸ்ரே உதவியால், பல் மற்றும் பற்களை சுற்றியுள்ள ஈறு, எலும்பு வியாதிகளை துல்லியமாக கண்டறியலாம்.நிரந்தர பல்செட்ஒருவேளை பற்கள் முற்றிலும் விழுந்து விட்டால் அல்லது ஒன்றிரண்டு பற்கள் போய்விட்டால், இயற்கையான பற்களை போன்ற, செயற்கைப் பற்களை வைத்துக்கொள்ளலாம். கழட்டி மாட்ட தேவையில்லை. நிரந்தரமாக வைத்து கொள்ளலாம். இந்த முறையில் வைக்கப்படும் பற்கள் இளம் வயதில் இருந்த இயற்கையான பற்களை போன்ற அமைப்பிலும், செயல்முறையிலும் இருக்கும்.இதனால் முதியோர், உணவை நன்கு மென்று உண்பதுடன், நல்ல ஆரோக்கியமாக இருக்கலாம். நன்கு மென்று உண்பதால், ரத்தத்தில் சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்த முடியும். வார்த்தைகளை தெளிவாக உச்சரிக்கலாம்.எல்லாவற்றையும் விட, சோகம் மறந்து நம்பிக்கையுடன் 'ஹா...ஹா' என சிரிக்கலாம்!பற்களில் ஏற்படும் பற்குழியை, ஆரம்ப நிலையிலேயே அடைப்பது அவசியம். பற்களை சுற்றியுள்ள ஈறு மற்றும் எலும்பு தேய்மானம் போன்றவற்றை, செயற்கை எலும்பு வைத்தல் மற்றும் ஈறு பிளாப் சர்ஜரி வாயிலாக, சரி செய்ய முடியும்.இந்த ஈறு வியாதியை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதால், பற்கள் மேலும் அசைந்து விழுவதை முடிந்த வரை தவிர்க்கலாம்.புகையிலை, பான், குட்கா புகைபிடித்தல் பழக்கம் உள்ளவர்களுக்கு, வாய் புற்றுநோய் அபாயம் உள்ளது. இந்த பழக்கம் உள்ளவர்கள், ஆறு மாதத்திற்கு ஒரு முறை வாய் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.