சர்க்கரை நோயாளிகள் பயப்பட வேண்டாம்! உணவில் கவனமாக இருந்தால் போதும்
கோவை:கொரோனாவை கண்டு பயந்து நடுங்கிய காலம் மாறி, பாதுகாப்புடன் இருந்தால் எதை கண்டும் அச்சப்பட வேண்டியதில்லை என்கிற தன்னம்பிக்கை, மக்களுக்கு வந்துவிட்டது.கொரோனாவை குணப்படுத்த மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும், உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்து, பல லட்சம் மக்கள் பாதிப்பில் இருந்து மீண்டு வருகின்றனர்.ஆனால், சர்க்கரை நோயாளிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால், பாதிப்பு அதிகரிக்கும் என்று கூறும் மருத்துவர்கள், சர்க்கரை அளவை முன்கூட்டியே கண்காணித்து, கட்டுப்படுத்துவதற்கான உணவு, உடற்பயிற்சி மற்றும் சிகிச்சை முறைகளை கடைபிடிக்க வலியுறுத்துகின்றனர்.இது குறித்து, கோவை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையின் நீரிழிவு நோயியல் துறை தலைமை மருத்துவர் வெங்கோ பிரசாத் கூறியதாவது:சர்க்கரை அளவு, 200 முதல் 300 வரை அதிகரித்தாலும், எவ்வித அறிகுறிகளையும் வெளிகாட்டாது. இதனால், பலரும் நமக்கு எந்த பிரச்னையும் இல்லை என நினைக்கின்றனர்.ஆனால், சர்க்கரை அளவு எவ்வளவு அதிகரிக்கிறதோ, அவ்வளவு பிரச்னை வரும் என்பதை உணர வேண்டும்.இன்றைய சூழலில், அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று வருவது இயலாது. எனவே, வீடுகளில் இருந்தபடியே சர்க்கரை அளவை கண்காணிக்க, குளூக்கோ மீட்டர் கருவியை பயன்படுத்தலாம்.பச்சை காய்கறி, கீரைகள் அதிகம் சேர்த்து கொள்ளலாம். மாவுசத்து, எண்ணெய், அசைவ உணவுகளை குறைத்துக் கொண்டால், சர்க்கரை அளவு அதிகரிப்பதை கட்டுப்படுத்த முடியும்.ஒருவேளை தேவைப்பட்டால், கோவை அரசு மருத்துவமனை நீரிழிவு துறையை, 82203 30350 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.