கனவு தவிர்... நிஜமாய் நில்! - தட்டணுக்களை அதிகரிக்கும் பப்பாளி!
கடந்த பல வாரங்களாக, 'டெங்கு' வைரஸ் பாதிப்பு, அதிக அளவில் உள்ளது. அதிதீவிர அறிகுறியான, தட்டணுக்கள் குறைவதே, பதற்றத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இதற்கான தீர்வு, நம் கைகளிலேயே இருக்கிறது என்பது தான், இதில் ஆறுதலான விஷயம். பல உடல் பிரச்னைகளுக்கு, நம்மை சுற்றி இயற்கையிலேயே தீர்வு இருக்கிறது. எளிமையான மூலிகைகளான, வேம்பு, சீந்தல் கொடி, பப்பாளி இலை போன்றவை, காய்ச்சலை கட்டுப்படுத்துவதுடன், தட்டணுக்களின் எண்ணிக்கையை குறையாமல் வைக்கும். 'கிளினிக்கல் ட்ரையல்' என, சொல்லப்படும், மருந்து கண்காணிப்பில், இது உறுதி செய்யப்பட்டு உள்ளது. மருத்துவ ஆலோசனை பெற்று, இவற்றை பயன்படுத்தலாம்.சீந்தல் கொடியில் தயாராகும், 'குடிச்சியாதி' கஷாயம், காய்ச்சலுக்கு நல்ல நிவாரணி. பப்பாளி இலைச் சாறு, தட்டணுக்களை அதிகரிக்கச் செய்வது, பல நுாற்றுக்கணக்கான ஆய்வு முடிவுகளில் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுதவிர, வேப்பிலை சாறு, கற்றாழைச் சாறு போன்றவையும், தட்டணுக்களை அதிகரிக்கச் செய்யும். இயற்கையிலேயே பல அற்புதங்கள் நிறைந்த நிலவேம்பு கஷாயம், காய்ச்சல், 'டெங்கு' உட்பட தொற்றுகள், ரத்தத்தை சுத்தம் செய்வது உட்பட, பல வகையிலும் அற்புதமாக செயல்படுகிறது. டாக்டர் டி.அரவிந்த் பரத்வாஜ் ஆயுர்வேத மருத்துவர், சென்னை