பதினைந்து சதவீதம் பேருக்கு சிகிச்சை அவசியம்!
கடந்த ஆண்டு வைரஸ் பாதிப்பின் போது, ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு அல்லது இரண்டு பேருக்கு தொற்று பாதித்தது. இரண்டாவது அலையில், குழு குழுவாக வைரஸ் தொற்று பாதிப்பு வருகிறது. உடனே, பதற்றமாக எல்லாரும் மருத்துவமனைக்கு ஓடுகின்றனர். கொரோனா அறிகுறிகள் தெரிந்தால், என்ன ஆகி விடுமோ என்று பதறாமல், முதலில் உங்களை, 'ரிலாக்ஸ்' செய்து கொள்ள வேண்டும். கொரோனா அறிகுறிகளில் ஏதாவது ஒன்று இருந்தாலும், வைரஸ் தொற்று இருக்குமோ என்ற எச்சரிக்கை உணர்வுடன், முதலில் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்வது முக்கியம். வீட்டில் இருந்தாலும் முக கவசம் அணிந்து கொள்ளுங்கள்; உங்கள் அறையின் ஜன்னல்களை திறந்து வைக்க வேண்டும்.அறையில் இருக்கும் காற்று ஒரே இடத்தில் சுழன்றால், உங்களிடம் இருக்கும் வைரஸ் அந்த அறைக்குள்ளேயே சுற்றிக் கொண்டு இருக்கும்; இது, வீட்டில் இருப்பவர்களுக்கு தொற்று ஏற்பட வழிவகுத்து விடும். ஒரு நாளைக்கு ஒன்றரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். பாராசிட்டமால் தவிர, வேறு எந்த மாத்திரையும் டாக்டரின் சிபாரிசு இல்லாமல் சாப்பிடக் கூடாது. இந்த அடிப்படை விஷயங்கள் செய்த பின், முடிந்தால் நேரில் அல்லது டெலி கன்சல்டேஷன் வழியாக, மருத்துவ ஆலோசனை பெறலாம்.உலக சுகாதார நிறுவனம், நம் நாட்டில் வெறும், 15 சதவீதம் பேருக்கு மட்டுமே சிகிச்சை தேவைப்படுகிறது. அவசியம் இல்லாமல் மருத்துவமனைக்கு சென்றால், அங்கிருக்கும் தொற்றை கூடுதலாக பெற்றுக் கொள்ளவும் வழி செய்யலாம்; நம்மிடம் இருக்கும் தொற்றை பிறருக்கு பரப்பலாம். அவசர தேவையில் இருப்போருக்கு ஆக்சிஜன், மருந்து, படுக்கை கிடைக்காமல் போகலாம். எனவே அவசியம் இல்லாமல், மருத்துவ மனைக்கு செல்வதை தவிர்ப்பது பாதுகாப்பானது.டாக்டர். தீபா நடராஜன்,முதல்வர், சவீதா காலேஜ் ஆப் பார்மசி, சென்னை.