உள்ளூர் செய்திகள்

இரத்த சோகைக்கு குட்பை!

கீரைகள், சத்துமிக்கவை என்பது அனைவரும் அறிந்தது தான். கடைகளுக்கு சென்று அதிக விலை கொடுத்து, சத்து மருந்துகளை வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக, கீரை சாப்பிட்டால் போதும். ஆனால், கீரைகளை வாங்கி சமைத்து சாப்பிட்டால் மட்டும், முழு பலன் கிடைத்து விடாது. கீரையின் சத்துக்கள், அப்படியே உடலுக்கு கிடைக்க என்ன செய்ய வேண்டும்?இந்தியாவில் பல வகை கீரைகள் உணவாக உட்கொள்ளப்படுகின்றன. அரைக் கீரை, பாலக் கீரை, தண்டுக் கீரை, வெந்தயக் கீரை, முருங்கைக் கீரை மற்றும் புதினா ஆகியவை, அதிக மக்களின் விருப்பப் பட்டியலில் இடம் பிடித்தவை. கீரையில் அப்படி என்ன இருக்கிறது?கீரைகளை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதின் மூலம், ரத்தசோகை வருவதை தடுத்து, நல்ல உடல்நலனைப் பெறலாம். சுண்ணாம்பு சத்து, பீட்டா கரோட்டின், வைட்டமின் 'சி போன்றவற்றை அதிகம் கொண்ட முக்கிய மூலப்பொருளாகும்.இந்தியாவில் ஒவ்வொரு வருடமும், 5வயதுக்கு உட்பட்ட, சுமார், 30 ஆயிரம் சிறு குழந்தைகள், வைட்டமின் ஏ, குறைபாட்டினால், கண்பார்வை இழக்கும் நிலை ஏற்படுகிறது. கீரைகளில் உள்ள கரோட்டின், உடலில் வைட்டமின் 'ஏ ஆக மாறுவதால், பார்வை இழக்கும் நிலை தடுக்கப்படுகிறது. 'பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்களையும் கொண்டுள்ளது.சாப்பிட வேண்டிய அளவு: இவ்வளவு சத்துக்கள் நிறைந்த கீரையை, மனிதர்கள் தினமும் உட்கொள்வது நல்லது. ஒவ்வொருவரும் தினமும் சாப்பிட வேண்டிய கீரையின் பரிந்துரைக்கப்பட்ட அளவு இதுதான் பெண்களுக்கு 100 கிராம், ஆண்களுக்கு, 40 கிராம். பள்ளி செல்லும் (4 - 6 வயது) சிறுவர்களுக்கு, 50 கிராம். 10 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் இருபாலருக்கும், 50 கிராம்.கீரைகளை நன்கு சமைத்து, மசித்து, கீரையிலுள்ள நார் பொருட்களை நீக்கிய பின்பே, சிறு குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.பாக்டீரியா கிருமி, சிறு பூச்சி மற்றும் மாசுப்பொருட்கள், தண்ணீர் அல்லது மண்ணின் மூலம் கீரைகள் மாசுபட வாய்ப்பிருக்கிறது. எனவே, சுத்தம் செய்யாமல், கீரையை உபயோகிக்கக் கூடாது. இல்லாவிட்டால், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்னைகள் வரலாம்.சத்துக்கள் முழுவதும் கிடைக்க: கீரையில் உள்ள சத்துக்கள் முழுமையாக கிடைக்க, கீரைகளை நீண்ட நேரம் சமைப்பதை தவிர்க்க வேண்டும். அதிக நேரம் சமைப்பதால் முக்கிய சத்துப்பொருளான கரோட்டின் சிதைந்து விடும். கீரைகளை சமைக்க பயன்படுத்தும் தண்ணீரை கொட்டிவிடக் கூடாது. கீரைகளை சமைக்கும் பாத்திரங்களை, சமைக்கும்போது மூடி வைக்க வேண்டும். கீரைகளை வெயிலில் உலர்த்தக் கூடாது. அப்படி செய்தால் அவற்றிலுள்ள கரோட்டீன்கள் வீணாகி விடும்.கோடையில் குளிர்ச்சி தரும் கீரை சமைத்துச் சாப்பிடுங்கள். அகத்தி, முளைக்கீரை, தண்டு, முருங்கை, பாலக், பீட்ரூட், கொத்தமல்லி, கறிவேப்பிலை ஆகிய கீரைகளில், வைட்டமின் ஏ மற்றும் அகத்தி, பொன்னாங்கண்ணி, முளைக்கீரையில், வைட்டமின் பி உள்ளது.உடல் வளர்ச்சிக்கு தேவையான பாஸ்பரஸ், மக்னீசியம், சோடியம், பொட்டாசியம் போன்ற தனிமங்களும், போதிய அளவில் கிடைக்கின்றன. ரத்த நாளங்கள், ஜீரண உறுப்புகளுக்கு பயன் கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !