பஸ்சிமோத்தன ஆசனம் செய்ய சிரமம் உள்ளதா?
பஸ்சிமோத்தன ஆசனம் செய்தால், நீரிழிவு வராமல் தடுக்கலாம் என்கின்றனர் யோகாசன நிபுணர்கள். இந்த ஆசனத்தை செய்வதில் ஆரம்பத்தில் சிரமம் இருந்தாலும், நாளடைவில் சரியாகி விடும் என்கின்றனர். இந்த ஆசனத்தில் ஆரம்ப நிலையில் படுத்து எழ, மிகவும் சிரமமாக இருக்கும். கைகளை தரையில் ஊன்றினால் தான் எழுந்திருக்கவே முடியும் என்ற அளவில் இருப்பார்கள். ஆசனங்களை செய்ய முயற்சிக்கும் தொடக்க காலங்களில் இது போல் அசவுகரியங்கள் எழுந்தால் மனம் தளரக்கூடாது. தரையில் கைகளை ஊன்றித்தான் எழ வேண்டி இருந்தால் சில நாட்கள் அப்படியே செய்யலாம். நாளடைவில் முறையான பயிற்சி வந்து விடும். சிலருக்கோ, கைகளை மேலே காதுகளை ஒட்டினாற் போல் வைத்துக் கொண்டு எழுந்திருக்க முடியாது. கைகளை முன்னுக்கு வீசி, பேலன்ஸ் செய்து எழுந்திருந்தால் தான் எழுந்திருக்க முடியும். இதுவும் நாளடைவில் சரியாகி விடும். சிலருக்கு கால் விரல்களை கைகளால் தொட முடியாது. பழக, பழக கால் விரல்களை கைகளால் பிடித்து விடலாம். முழங்கால் மடிக்காமலேயே கூடுமான வரை குனிந்து தொட முயற்சிக்க வேண்டும். இப்படி பழகி வரும் போது, தொடையில் உள்ள தசைகளும், நரம்புகளிலும் வலி ஏற்படுவதுண்டு. சில நாட்களில் இது சரியாகி விடும். சிலருக்கு முழங்காலில் முகத்தை கொண்டு வைக்க முடியாது. இதுவும் விடா முயற்சியுடன் பழகும் போது சரியாகி விடும். முடியாது என்பது எதுவுமே இல்லை. பஸ்சிமோத்தனம் செய்யும் போது, குடல்கள், பித்தப் பை, இரைப்பை முதலியன நன்றாக அமுக்கப்படுகின்றன. உடலின் உயிராற்றலை வலுப்படுத்தும் முதுகெலும்பு, முதுகு நரம்பு வளைத்து இழுக்கப்படுகிறது. இதனால் நீரிழிவு குறைபாடு உண்டாவது தடுக்கப்படுகிறது. ஆண்மை அதிகரிக்கிறது. மலட்டுத்தனம் நீங்குகிறது. வயிற்று வலி, தலைவலி, மூலக்கடுப்பு, இடுப்பு வலி, முதுகுவலி, பலவீனம் முதலியவை நீங்குகிறது. பெண்களிடத்தில் நீண்ட நாட்களாக இருக்கும், மாதவிடாய் கோளாறுகள் பூரணமாக குணமாகி விடும். இடுப்பு வலுவடையும். இளம்பெண்கள் திருமணத்திற்கு முன் இந்த ஆசனத்தை செய்து வருவதால், இடுப்பு சார்ந்த இனப்பெருக்க உறுப்புகள் வலுவடைந்து, திருமணத்திற்கு பின் எளிதான சுகப்பிரசவம் உண்டாக வழி வகை ஏற்படும்.இந்த ஆசனத்தை வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் செய்ய கூடாது. அறுவை சிகிச்சை நடந்து குறிப்பிட்ட காலங்கள் ஆகி இருந்தால், சிறந்த ஆசன நிபுணர்களுடன் ஆலோசனை பெற்று செய்யலாம். வழக்கமாக ஆசனத்தை செய்து வரும் கர்ப்பிணிகள், ஆசனத்தை முழுமையாக செய்யாமல் உட்கார்ந்த நிலையில் காதுகளை ஒட்டி கைகளை நிமிர்த்திய நிலையில், ஆசனத்தை முடித்துக் கொள்ள வேண்டும். முன்பக்கம் குனிந்து முழங்காலை தொடும் நிலைக்கு போகக் கூடாது. பழக்கமில்லாத கர்ப்பிணிகள், இந்த ஆசனத்தை எக்காரணம் கொண்டு செய்யக் கூடாது. படிப்படியாக நீரிழிவு மறைய இந்த ஆசனம் உதவுகிறது. மனதை ஒருமுகப்படுத்த இந்த ஆசனம் உதவுகிறது. ஒரு தேர்ந்த ஆசானின் ஆலோசனை பெற்று, இந்த ஆசனம் செய்வதே நல்லது.