தாய்பால் எப்படி கொடுக்க வேண்டும்
குழந்தைகளுக்கு தாய்ப்பால், முக்கியமான ஊட்டச்சத்து, நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட அபூர்வமான மருந்து. இந்த உண்மை தெரிந்தும், இன்றைய பெண்கள் பலர் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதில்லை. கொடுப்பவர்களுக்கு, அதை எப்படி கொடுக்க வேண்டும் என்ற விபரம் தெரியவில்லை.அது குறித்த, சில டிப்ஸ் இதோ:எப்போதும் உட்கார்ந்த நிலையில்தான், பால் கொடுக்க வேண்டும். படுத்துக்கொண்டே பால் கொடுத்தால், குழந்தையின் கழுத்து ஒருபுறமாக சாய்ந்து, பால் உறிஞ்ச சிரமம் உண்டாகும். குழந்தைக்கு கழுத்து வலியையும் கொடுக்கும். அதுமட்டுமில்லாமல், படுத்த நிலையில் இருப்பதால், தாயும், குழந்தையும் அப்படியே உறங்கிவிடும் வாய்ப்பு உள்ளது. இதனால் பால் குழந்தையின் மூக்கில் ஏறி, விபரீதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பால் கொடுக்கும்போது தாய் கண்டிப்பாக உறங்கக்கூடாது. குழந்தை பால் குடிக்கும்போது உறங்கி விட்டால், உடனடியாக குழந்தையை மார்பில் இருந்து விலக்கி, தூங்க வைக்க வேண்டும்.அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றவர்கள், சில காலத்துக்கு குழந்தையை தூக்கி பால் கொடுக்க இயலாது. இவர்கள் படுத்த நிலையில் பால் கொடுத்தல்தான் எளிதானது. அப்படி கொடுக்கும் பட்சத்தில், மேலே சொன்ன விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கூடிய விரைவில் அந்த பழக்கத்தில் இருந்து மாறி விட வேண்டும். பிறந்த குழந்தைக்கு தலை நிற்கும் வரை, மிகவும் எச்சரிக்கையாகவே பால் கொடுக்க வேண்டும். கழுத்துப் பகுதிக்கு கீழ் கையைக் கொடுத்து, கழுத்தை இறுக்காமல், தலையையும் முதுகையும் தாங்கியபடி, குழந்தையை பிடித்துக்கொண்டு, அணைத்தவாறு, தலையை சற்றே தூக்கிய நிலையில் வைத்து கொடுக்க வேண்டும்.குழந்தையின் மூக்கு பகுதி, மார்பில் கூடுதலாக அழுத்தக்கூடாது. குழந்தையை நேர்மட்டத்தில் வைத்து, பால் கொடுக்கும்போது புரையேறும் வாய்ப்புள்ளது. எனவே குழந்தையின் தலை, சற்று உயரத்தில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். குழந்தை படுத்திருக்கும் மட்டத்துக்கு குனிந்து பால் கொடுக்க வேண்டும். அல்லது குழந்தைக்கு மார்பு எட்டும் உயரத்துக்கு, மிருதுவான தலையணையை வைத்து, அதில் குழந்தையை வைத்து பால் கொடுக்கலாம். குழந்தை பால் குடித்தவுடன், தோளில் சாய்த்து பிடித்தவாறு அதன் முதுகில் மெதுவாக தட்டிக்கொடுக்கவும். குழந்தைக்கு ஏப்பம் வரும் வரை இப்படி செய்யவும்.குழந்தைக்கு பால் கொடுப்பதற்கு முன்பும், கொடுத்த பிறகும், மார்பகத்தை மிதமான வெந்நீரில் நனைத்த துணியால், நன்றாக துடைத்துவிட வேண்டும். குளிக்கும்போது அதிக மணம் தரும் சோப்பு உபயோகிப்பதை தவிர்க்கவும். மார்பகத்தை எப்போதும், சுத்தமாக வைத்திருக்க வேண்டும். குழந்தைகள் அதிக நேரம் உறங்குவதாலும், உடற் செயல்பாடுகள் மிகவும் குறைவு என்பதாலும், வெறும் பால் மட்டும் குடிப்பதால் செரிமான பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இதற்கு மருத்துவர்கள் தரும் மருந்தை தொடர்ந்து கொடுத்து வரவும்.காய்ச்சி, ஆற வைத்த நீரை ஒரு தேக்கரண்டி அளவுக்கு, தினமும் பருக கொடுக்கலாம். அப்படி கொடுக்கும்போது, சிறிது சிறிதாகதான் கொடுக்க வேண்டும்.