இரண்டு டோஸ் தடுப்பூசி அவசியமா?
முதல் 'டோஸ்' போட்டதும், எந்த தடுப்பூசியும் கொரோனா தொற்றுக்கு எதிரான முழுமையான நோய் எதிர்ப்பு திறனை உருவாக்காது. முதல் தடுப்பூசி, உடலில் உள்ள 'பி' செல்களை, 'கோவிட் -19' வைரசைப் பற்றி உணரச் செய்து, நோய் எதிர்ப்பு திறனை உருவாக்குகிறது. இரண்டாவது தடுப்பூசி, 'பி' செல்களால் உருவாகும் நோய் எதிர்ப்பு திறனை ஊக்குவித்து, அதை அதிகப்படுத்துகிறது. ஆதலால், இரண்டு டோஸ் தடுப்பூசியும் போட்டுக் கொள்ள வேண்டும்.'கோவாக்சின்' இரண்டாவது டோஸ் இடைவெளி நான்கு வாரங்கள். இதை ஓரிரு வாரங்கள் தள்ளி போடுவதால், நோய் எதிர்ப்பு திறனில் மாற்றமோ, பாதிப்போ ஏற்படாது. இந்த இடைவெளி ஒரு சில வாரங்களுக்கு மேல் அதிகரிக்கும் பட்சத்தில், அதன் செயல்திறனில் மாறுபாடுகள் ஏற்படலாம். நிர்ணயிக்கப்பட்ட கால இடைவெளியில் இரண்டாவது டோஸை போட்டுக் கொள்வது நல்லது. தற்போது பயன்பாட்டில் உள்ள இரண்டு தடுப்பூசிகளும், நம் நாட்டில் உள்ள மரபணு மாற்ற வைரஸ்களுக்கு எதிராகச் செயலாற்றி, போதிய அளவு எதிர்ப்பு சக்தியை உருவாக்கவல்லது.எந்த வகை தடுப்பூசியும் நோயை 100 சதவீதம் தடுக்காது. ஆனால், நோயின் தீவிரத்தில் இருந்து நம்மை காப்பாற்ற உதவும்.பக்கவிளைவுகள்தடுப்பூசி எடுத்துக் கொள்ளும் அனைவருக்கும் பக்கவிளைவுகள் ஏற்படுவதில்லை. சிலருக்கு தடுப்பூசி போட்ட முதல் 24 மணி நேரத்திற்குள் பக்க விளைவுகள் ஏற்படலாம். சாதாரண பக்கவிளைவுகளான காய்ச்சல், உடம்பு வலி, தலைவலி போன்றவை இரண்டு, மூன்று நாட்களில் சரியாகிவிடும்.மிக மிக அரிதாகவே ரத்தக்கட்டு மற்றும் வேறு தீவிர பக்கவிளைவுகளை ஏற்படலாம். பக்கவிளைவுகளை குணப்படுத்த, பிரத்யேக மருந்து கிடையாது. மருத்துவரின் அறிவுரைப்படி, பொதுவான மருந்துகளை பயன்படுத்தலாம். அரிதாக, ஆபத்தான பக்கவிளைவுகள் ஏற்பட்டால், உடனடியாக தொடர் மருத்துவ கண்காணிப்பில் சிகிச்சை பெற வேண்டும்.'ஆன்டிபாடி' பரிசோதனைதடுப்பூசி போட்ட பின், 'ஆன்டிபாடி' பரிசோ தனை செய்ய தேவையில்லை. பல்வேறு வகையான ஆன்டிபாடி உள்ளதால், இந்தப் பரிசோதனை மற்றும் அதன் முடிவுகளில் பல குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. மேலும், பரிசோதனை முடிவுகளின் மூலம் சிலருக்கு ஆன்டிபாடி மிகவும் குறைவாக இருப்பதாக தெரிய வந்தாலும், அவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி கண்டிப்பாக இருக்கும். கொரோனா வைரசுக்கு என பிரத்யேக ஆன்டி வைரஸ் மருந்து ஏதும் வரவில்லை. எனவே, தற்போதைக்கு தடுப்பூசி போட்டுக் கொள்வதைத் தவிர மாற்று வழிகள் ஏதுமில்லை.டாக்டர் ஜெயஸ்ரீ மகாலிங்கம்,தலைவர், கிளினிக்கல் ரிசர்ச்,இன்ஸ்டிட்யூட் பார் ஹெல்த் கேர் எஜுகேஷன்,ஐதராபாத். 75502 50853