"காலையில் ராஜா உணவு, இரவில் ஏழை உணவு
* எஸ்.ரமேஷ், மதுரை: உணவில் வனஸ்பதியை உபயோகிப்பதால் நன்மையா, தீமையா?நம் இந்திய உணவு வகைகளில் செய்யும் பெரிய தவறு அதிகளவில் எண்ணெயைப் பயன்படுத்தி பொரிப்பதுதான். இது தவறு. வனஸ்பதியும் எண்ணெய் போன்றே நம் உடலை பாதிக்கும். குறிப்பாக சர்க்கரை நோய், உயர் ரத்தஅழுத்தம் வரும் தன்மை அதிகரிக்கப்படுகிறது. ரத்தநாளங்களின் உட்சுவர் பாதிக்கப்பட்டு, அதனால் அடைப்பு ஏற்பட்டு, பக்கவாதம், மாரடைப்பு போன்ற நோய்கள் ஏற்படும். எனவே வனஸ்பதியை அறவே தவிர்ப்பது நல்லது. எண்ணெயை மிகச் சிறிய அளவில், தாளிப்பதற்கு மட்டும் உபயோகிக்கலாம். எண்ணெய் வகையில் ஆலிவ் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், நல்லெண்ணெய், தவிட்டு எண்ணெயை மாறி, மாறி உபயோகித்தால் நல்லது.*கோபி கண்ணன், வத்தலகுண்டு: மார்பு பகுதியில் அழுத்தமாகவும், இனம்புரியாத வலியாகவும் உணர முடிகிறது. இது எதனால்?மார்பு பகுதியில் அழுத்தமோ, எரிச்சலோ, வலியோ ஏற்பட்டால், உடனடியாக, இது எதனால் ஏற்படுகிறது என கண்டறிவது முக்கியம். உடனடியாக உங்கள் டாக்டரிடம் சென்று, ரத்தப்பரிசோதனை, இ.சி.ஜி., எக்கோ கார்டியோகிராம், டிரெட்மில் பரிசோதனை செய்வது நல்லது. இருதய வலியாக இருந்தால் இப்பரிசோதனையில் அதனை எளிதில் கண்டுபிடித்து விடலாம். இருதய வலியாக இல்லாமல், தசை, வாயு, அல்சர், நரம்பு வலியாக இருந்தால் அதற்கேற்ப பரிசோதனை, சிகிச்சை தேவைப்படும்.* வே.ராமசாமி, அருப்புக்கோட்டை: டாக்டர்கள் எழுதிக் கொடுக்கும் மாத்திரையை வாங்கச் செல்லும்போது, மருந்துக் கடையில் உள்ளவர்கள், 'அதே மாத்திரைதான், கம்பெனிதான் வேறு' என தருகின்றனர். அதை எடுக்கலாமா?இருதய மருந்துகளைப் பொருத்தவரை, உங்கள் டாக்டர்கள் கூறும் மருந்தை, சரியான அளவில், சரியான நேரத்தில், வேளை தவறாமல் எடுப்பது மிகவும் அவசியம். இந்திய மருந்து கம்பெனிகளைப் பொருத்தவரை, பெரும்பாலான கம்பெனிகள் தயாரிக்கும் மருந்தின், தரமும், அளவும் சரியாகவே உள்ளன. இருப்பினும் சில கம்பெனிகளின் மருந்துகள், தரம் குறைவாக உள்ளன. எனவே, நீங்களாக முடிவு செய்யாமல், அந்தக் கம்பெனியின் பெயரை உங்கள் டாக்டரிடம் தெரியப்படுத்தி, அம்மருந்தை எடுக்கலாமா என அனுமதி பெற்று எடுப்பதே சிறந்தது.* டி. சங்கரப்பன், ராஜபாளையம்: கடந்த 3 ஆண்டுகளாக எனது உடல் எடை அதிகரித்து வருகிறது. இதற்காக நான் தினமும், காலை உணவை அறவே தவிர்த்துவிட்டேன். இது சரியா? இதைத் தொடரலாமா?ஒருவரது உயரத்திற்கு ஏற்ப, எடையை சரியாக வைப்பது உடல் ஆரோக்கியத்திற்கு அவசியம். எடை அதிகரித்தால் சர்க்கரை நோய், உயர் ரத்தஅழுத்தம், ரத்தநாளங்களில் அடைப்பு வரும் தன்மை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எடையை குறைக்க உணவுப் பழக்கத்தை பொறுத்தவரை, அரிசி உணவை நன்கு குறைப்பது, இனிப்புகளை தவிர்ப்பது, காபி, டீயை சர்க்கரை இன்றி குடிப்பது, ஸ்னாக்ஸை அறவே தவிர்ப்பது மிகவும் அவசியம். ஆனால், காலை உணவை தவிர்ப்பது மிகத்தவறான பழக்கமே. நாம் எடுக்கும் உணவிலேயே காலை உணவுதான் மிகவும் இன்றியமையாதது. ஏனெனில், இரவு முழுவதும் நீண்ட நேரம் உண்ணாமையாலும், பகலில் நீண்ட நேரம் சக்தியை செலவிடுவதாலும், காலை உணவுதான் அவசியமானதாகும். ஒருவர் காலை உணவை ராஜாவைப் போல உண்பதும், இரவு உணவை, இல்லாத ஏழையைப் போல உண்பதும்தான் உடல் ஆரோக்கியத்திற்கு அவசியமானது என்பது பழமொழி. எனவே சரியான நேரத்தில், சரியான உணவை எடுத்துக்கொள்வதுடன், தினசரி நடைப்பயிற்சி செய்வதால் எடையை சரியான அளவில் பராமரிக்க முடியும். - டாக்டர் சி.விவேக்போஸ், மதுரை. 0452- 233 7344