மறதி நோயை ஏற்படுத்தி விடும் தனிமை ஆகவே பேசுங்கள்... மகிழ்ந்து இருங்கள்!
முதுமையில் ஏற்படும் உடல் நலம் குறித்து கவனம் கொள்ளும் நாம், மனரீதியான பாதிப்புகளை பெரிதாக கண்டுகொள்வதில்லை. முதுமையில் ஏற்படும் தனிமையால் பலர் தற்போது மறதிநோயுடன் சிகிச்சைக்கு வருகிறார்கள் என்கிறார் டாக்டர் பார்த்திபன்..அவர் நம்மிடம் கூறியதில் இருந்து...உடல் ரீதியாக மட்டுமின்றி உளவியல் ரீதியான பிரச்னைகளையும் பலர் எதிர்கொள்கின்றனர். தற்போதுள்ள தொழில்நுட்பங்கள் காரணமாக, பல வீடுகளில் முதியோர், உறவுகள் இருந்தாலும் தனிமையில் வாடுகின்றனர்.இதன் காரணமாக, முதியோரிடம் மறதிநோய், பேச இயலாமை, சிந்திக்கும் திறன் குறைவு ஆகியவற்றுக்கு சிசிச்சை பெற வருகின்றனர். தினசரி உரையாடல்கள் இல்லாமல் மூளை செயல்பாடு குறையும். நீண்ட கால சோகம் மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.அடிக்கடி பொருட்களை எங்கு வைத்தோம் என மறத்தல், பெயர்கள் நினைவில் வராமல் போதல், ஒரே கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்டல், தேதி மற்றும் கிழமைகளில் குழப்பம், பேச்சு மந்தமாகுதல் ஆகியவை ஆரம்ப அறிகுறிகள்.இந்த பிரச்னை அவர்களின் தனிமை காரணமாக துவங்கியிருக்கலாம். ஒரு சிலர் கை நடுக்கம் காரணமாக வங்கிகளில் கையெழுத்து போடவே தவிக்கின்றனர்.மறதிநோய் வராமல் தடுக்க தினசரி 20-30 நிமிடம் முழுமையான ஈடுபாட்டுடன் அவர்களுடன் உரையாடல் இருக்க வேண்டும். பழைய கால அழகிய கதைகளை சொல்ல சொல்லி கேளுங்கள்; இது அவர்களுக்கு நல்ல மகிழ்வான மனநிலையை தரும். இடது கையில் எழுத சொல்லுங்கள். சுடோகு, பன்னாங்கல், பல்லாங்குழி போன்ற விளையாட்டுக்களை விளையாடும் சூழல் ஏற்படுத்துங்கள். குழந்தைகள் போன்று, வெளியிடங்களுக்கு செல்லவும், தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் ஆசை வெளிப்படுத்தாவிடிலும் இவர்களுக்குள்ளும் இருக் கும். அதை முடிந்தபோதெல்லாம் நிறைவேற்றுங்கள்.தனிமை என்பதை முதுமையில் நெருங்கவிடாமல் பார்த்துக்கொள்வது நல்லது.