உள்ளூர் செய்திகள்

சுவாச நோய்களை விரட்டும் மதுரை ஸ்பெஷல் வடை, பஜ்ஜி

பூந்துாறலாய் துாவினாலும், இடி இடித்து பெய்தாலும் மழையை ரசிக்கலாம். மழையுடன் மழைக்கால நோய்களான காய்ச்சல், தும்மல், மூக்கடைப்பு, தலைவலி, மூச்சிரைப்பு போன்ற நோய்கள் வந்து விட்டால், ரசனை மாறிவிடும். மழை விட்டால் போதும் என்றாகி விடும்.இதை அறிந்து தான் முடக்கத்தான், முசுமுசுக்கை, துாதுவளை, தும்பை, துளசி, கருந்துளசி, கல்யாண முருங்கை, கற்பூரவல்லி, நொச்சி, ஆடாதொடா போன்ற மழைக்கால மூலிகைகளை இயற்கை தந்துள்ளது.முடக்கத்தான் சூப்மூட்டு வலிக்கு முடக்கத்தான் என்பது அனைவருக்கும் தெரியும்; நெஞ்சில் உள்ள சளியை வெளியேற்றும் என்பது பலருக்கும் தெரியாது. கைப்பிடி அளவு முடக்கத்தான் இலைகளை அரிந்து, சிறிதளவு சின்ன வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, மிளகு, தனியா, மஞ்சள் துாள், உப்பு சேர்த்து வதக்கி, நீர் சேர்த்து கொதி விட்டு, வடிகட்டி, வாரத்தில் மூன்று நாட்கள், 100 மில்லி குடித்தால், மூட்டு வலி, மார்பு சளி, இருமல் சரியாகிவிடும்.முசுமுசுக்கை அடைமுசுமுசுக்கை செடியின் இலைகளை நன்றாக நீரில் அலசி, தோசை மாவுடன் சேர்த்து அரைத்து தோசை, அடையாக சுட்டு சாப்பிடலாம். ஆஸ்துமா, சுவாசக் கோளாறுகளுக்கு சிறந்தது.துாதுவளை துவையல்துாதுவளை வளர்த்த வீட்டில் நெஞ்சில் களங்கமில்லை என்பது பழமொழி. நுரையீரலை காப்பதில் அவ்வளவு சக்தி வாய்ந்தது துாதுவளை. சளியை வெளியேற்றி சீரான சுவாசத்தை தரும். ஆஸ்துமா, டி.பி., நாள்பட்ட இரைப்பு உள்ளவர்கள், வாரத்தில் இரண்டு நாட்கள் துாதுவளை துவையலை சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். சித்த மருத்துவத்தில் சூரணம், லேகியம், நெய் மருந்து உள்ளது.தும்பை தைலம்சுத்தம் செய்த ஒரு கைப்பிடி தும்பைப் பூ இலைகளை நசுக்கி, ஒரு குழிக்கரண்டி அளவு தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி, வடிகட்டி வைத்துக் கொள்ளவும். குளிப்பதற்கு முன்னர் லேசாக சூடு செய்து, உச்சந்தலை, நெற்றிப் பொட்டு, மூக்கு, புருவத்தின் மேல் தடவி, 10 நிமிடங்கள் கழித்து வெந்நீரில் குளித்தால், தலைவலி, தலை பாரம், மூக்கடைப்பு, உடல் வலி உட்பட எல்லா பிரச்னைகளும் தீர்ந்து விடும். மழைக்காலத்தில் வாரம் ஓரிரு நாட்கள் இதை செய்யலாம்.துளசி நீர்கைப்பிடி அளவு துளசி இலைகளை சுத்தம் செய்து நசுக்கி, தலா ஐந்து கிராம்பு, ஏலக்காய் தட்டிப் போட்டு, 1 லிட்டர் நீரில் சேர்த்து 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து வடிகட்டவும். இதை, 2 லிட்டர் வெந்நீரில் கலந்து வைத்து, நாள் முழுதும் பருகினால், சுவாச நோய்களைத் தடுக்கலாம்.கல்யாண முருங்கை வடைகல்யாண முருங்கை வடை, மதுரை மாவட்டத்தில் பிரபலமான மருந்து உணவு. அரிசி மாவுடன் கலந்து வடையாகவோ, அடையாகவோ தட்டி சாப்பிடுவர். சிலர் ரசம் வைத்தும் குடிப்பர். எந்த விதத்தில் சாப்பிட்டாலும் சளியும், கபமும் சரியாகி விடும். பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகளுக்கும் இது சிறந்தது.கற்பூரவல்லி பஜ்ஜிகல் போன்ற சளியைக் கரைக்கும் கற்பூரவல்லி என்பது பழமொழி. இந்த இலையில் பஜ்ஜி செய்து சாப்பிடலாம். குழந்தைகளுக்கு மார்பு சளி இருந்தால், 5 - 10 சொட்டு கற்பூரவல்லி சாறு பிழிந்து தேனுடன் கலந்து தரலாம்.ஆடாதொடா இருமல் மருந்துதொடர் சோர்வு, துாக்கமின்மை, உடல் வலி, தலைவலி, சிறுநீர் கசிவை ஏற்படுத்தும் எந்த வகை இருமலாக இருந்தாலும், பக்க விளைவுகள் இல்லாத ஆடாதொடா மணப்பாகு சிறந்த மருந்து. 10 - 15 மில்லி மூன்று வேளை, ஐந்து நாட்கள் குடிக்கலாம். சர்க்கரை நோயாளிகள் மணப்பாகை தவிர்த்து, ஆடாதொடா குடிநீர் குடிக்கலாம்.இது தவிர, உத்தாமணி, நஞ்சறுப்பான், கண்டங்கத்திரி, பற்பாடகம், கரிசாலை போன்ற மூலிகைகள், திப்பிலி ரசாயனம், நெல்லிக்காய் லேகியம், குங்குமப் பூ உட்பட பல சித்த மருந்துகள் சுவாச நோய்களை எளிதாக சரி செய்து, நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்கும்.டாக்டர் மூலிகைமணி அபிராமி,சித்த மருத்துவர், சென்னை96000 10696, 90030 31796


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !