உள்ளூர் செய்திகள்

மனசே மனசே... குழப்பம் என்ன!

சம்பவம் - 1மாரடைப்பு ஏற்பட்ட நடுத்தர வயது பெண்ணை, எங்கள் மருத்துவமனை, அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தோம். நினைவு திரும்பிய நேரம் எல்லாம், 'என் பையன், என் பையன்' என்றார். என்ன விஷயம் என, விசாரித்த போது, அவரின், பிளஸ் 1 படிக்கும், 16 வயது மகனுக்கு, பக்கத்தில் வசிக்கும் ஒரு பள்ளி மாணவியுடன் காதல். இருவரும் சில மாதங்கள் ஒன்றாக சுற்றிய நிலையில், அந்தப் பெண், இவனை விட்டு விட்டு, வேறு ஒரு பையனுடன் பழக ஆரம்பித்து விட்டாள். இது தெரிந்தவுடன், 35 துாக்க மாத்திரைகளை விழுங்கி, ஆபத்தான நிலையில், வேறு ஒரு மருத்துவமனையில் இருக்கிறான் பையன். பையன் இப்படி செய்தவுடன், அதிர்ச்சியில், உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு, அம்மாவுக்கு மாரடைப்பு வந்து விட்டது. சம்பவம் - 2உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த, 79 வயதுடையவர், நல்ல வழக்கறிஞர் என, பெயரெடுத்தவர். ஒரு சொத்து வழக்கில் வாதாடினார்; தோற்று விட்டார். இவரின் கட்சிக்காரர், வழக்கறிஞர் வீட்டின் வெளியே வந்து, 'எதிர் பார்ட்டிகிட்ட எவ்வளவு பணம் வாங்கினே... இப்படி என்னை ஏமாத்திட்டியே...' என்று கத்த, வழக்கறிஞருக்கு, 'ஹார்ட் - அட்டாக்!' மருத்துவமனைக்கு கொண்டு வந்த அவரை பரிசோதித்ததில், இதயத்தில் மூன்று அடைப்புகள். அறுவை சிகிச்சை செய்துள்ளோம்.சம்பவம் - 3பொள்ளாச்சியில் ஒரு பிரபலமான டாக்டர் அவர். அவரின் குடும்பத்தினர் பலர், அரசியல் கட்சியில் பெரிய பதவிகளில் இருக்கின்றனர். அவரின் மருத்துவமனைக்கு, ஒரு தொழிலாளி வந்தார்; சிகிச்சை பலனளிக்காமல் இறந்து போனார். 'தவறான சிகிச்சையால் இறந்தார்' என, ஆர்ப்பாட்டம் செய்தனர் உறவினர்கள். பயத்தில், டாக்டருக்கு மாரடைப்பு வந்து, இறந்தே போனார்.இருபது வயதில் இருந்து, 86 வயது வரை, தற்போது எல்லா வயதினருக்கும் மாரடைப்பு வருகிறது. உடற்பயிற்சியின்மை, அதிக கொழுப்பு, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் என, மாரடைப்பு வருவதற்கு பல காரணங்கள் இருந்தாலும், அதீத மன அழுத்தத்தால் மாரடைப்பு ஏற்படுவது அதிகமாகி உள்ளது. 'என்ன செய்வது? நம்முடைய வாழ்க்கை முறையே அப்படி ஆகிவிட்டது' எனச் சொல்ல வேண்டாம். ஒருவர் மீது அதீத கோபம் இருந்தால் எப்படி நடந்து கொள்வோம்... சத்தமாக, உணர்ச்சி வசப்பட்டு பேசுவோம்!அந்த நேரத்தில், 'அட்ரினலின்' என்ற ஹார்மோன் அதிகம் சுரந்து, இதயத்துடிப்பு அதிகமாகி, வேகமாக ரத்தத்தை, 'பம்ப்' செய்யும். பதற்றம், அதிக மன அழுத்தம் இருந்தாலும் அப்படித் தான். 'அதற்காக கோபமே படாமல், உணர்ச்சிகளை அடக்கி, அமைதியாக இருக்க முடியுமா?' எனக் கேட்டால், முடியாது தான். அறையை தாழிட்டு, என்ன பாஷையில் வேண்டுமானாலும், யார் மீது கோபமோ, அவரை, உங்கள் விருப்பப்படி திட்டுங்கள்; அடக்கி வைத்த எதிர்மறை உணர்வுகள் எல்லாம் கொட்டிய பின், அமைதியாக வெளியில் வந்து, அடுத்த வேலையைப் பாருங்கள். நிறைவேறாத ஆசை, நாம் செய்யாத தவறுக்கு நம் மீது குற்றம் சொல்வது, இந்த இரண்டும் தான் வெறுப்பாக மனதில் தேங்கி, கோபமாகி, மன அழுத்தத்தில் கொண்டு விடுகிறது. உணர்ச்சி வசப்படாமல், நிதானமாக ஏன், எதற்கு என்று யோசிக்கப் பழகினால், எந்தப் பிரச்னையும் வராது.வாழ்க்கை வாழ்வதற்கு தான்... சாவதற்கு இல்லை.டாக்டர் ஜி.பக்தவச்சலம்,இதய நோய் சிறப்பு நிபுணர், கோவை.drgb@kggroup.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !