மனசே மனசே... குழப்பம் என்ன!: சுதந்திரத்தை உணர்ந்த வினாடிகளில்...
எனக்கு வந்திருப்பது, நரம்பு தொடர்பான, 'நியூரோ எண்டோக்ரைன் கேன்சர்' என்று சில வாரங்களுக்கு முன், உறுதி செய்யப்பட்ட போது, என் மொழியில், ஒரு புது வார்த்தை சேர்ந்தது. மிக அரிதான இந்த நோய் குறித்து, போதுமான தகவல்கள் எதுவும் இல்லை; எனவே, சிகிச்சையும் குறைவு. மற்ற நோய்களுக்கு இருப்பதை போல, தீர்மானமான சிகிச்சை இல்லை. நோயின் தீவிரம், டாக்டர்களின் முயற்சி, தோல்வி, சவால்களுக்கு நடுவே மாட்டிக் கொண்டுள்ளேன்.வழக்கத்தில் இல்லாத ஒரு புதிய விளையாட்டு, என் முன்னே இருக்கிறது. வாழ்க்கை எனும் ரயில் பயணத்தில், வேகமாக சென்று கொண்டிருந்த நேரத்தில், லட்சியங்கள், கனவுகள், இலக்குகள் என, ஆர்வத்தோடு பயணம் இருந்த சமயம், எதிர்பாராத தருணத்தில், டிக்கெட் பரிசோதகர், என் தோளை தட்டி, 'நீ இறங்க வேண்டிய இடம் வந்து விட்டது; தயவு செய்து இறங்கு' என்கிறார். குழப்பத்துடன், 'இல்லை... நான் இறங்க வேண்டிய இடம் இதுவல்ல' என்கிறேன்.'இல்லை... இது தான், இறங்கு' என்கிறார். எதிர்பாராத இந்த தருணம், கடலலைகளில் சிக்கி, இலக்கே இல்லாமல் அலையும் மரத்துண்டு, மொத்த கடலையும் கட்டுப்படுத்த நினைப்பதை உணர்த்துகிறது.குழப்பம், அதிர்ச்சி, பயம், பதற்றமான மனநிலையில், வழக்கம் போல மருத்துவமனைக்கு சென்ற ஒருநாள், என் மகனிடம், 'இந்த மனநிலையில் நோயை எதிர்கொள்ள விரும்பவில்லை; பயமும், பதற்றமும் பிரச்னையை இன்னும் சிக்கலாக்கி, என்னை பலவீனமாக்கி விடும்' என்றேன்.தாங்கவே முடியாத வலியில் துடித்த போது, எந்த நம்பிக்கையையும் ஏற்க முடியவில்லை. இந்த வளி மண்டலம் முழுவதும், வலி மட்டுமே இருப்பதாக தெரிந்தது; கடவுளை விடவும், வலி மகத்தானது என்று தோன்றியது.சிகிச்சை பெறும் மருத்துவமனைக்கு எதிரில், 'லார்ட்ஸ்' கிரிக்கெட் ஸ்டேடியம் உள்ளது. என் குழந்தைப் பருவ கனவு, 'மெக்கா' இது தான். ஆனால், இப்போது அதை உணரக் கூட முடியவில்லை. வலியோடு மருத்துவமனைக்குள் நுழைந்த போது, எதிரில் விவியன் ரிச்சர்ட்சின் சிரிக்கும் போஸ்டரை பார்த்தேன்; ஒன்றும் தோன்றவில்லை. அது எனக்கு சொந்தமான உலகமே இல்லை. பால்கனியில் நின்று நிமிர்ந்து பார்த்தேன். வாழ்வுக்கும், மரணத்திற்கும் இடையிலான விளையாட்டில், இரண்டிற்கும் இடையில் ஒரு சாலை மட்டுமே இருப்பது புரிந்தது. ஒரு பக்கம் மருத்துவமனை, அடுத்த பக்கம் ஸ்டேடியம். அந்த வினாடியில், பிரபஞ்சத்தின் சக்தியும், அறிவும் பிரமிக்க வைத்தது. இப்போது செய்ய வேண்டியதெல்லாம் ஒன்று தான்... எனக்குள் இருக்கும் வலிமையை உணர்ந்து, என் முன் இருக்கும் சவாலான ஆட்டத்தை சிறப்பாக ஆட வேண்டும்; அவ்வளவு தான்.இந்த எண்ணம் வந்தவுடன், எனக்கு மேலே இருக்கும் அபரிதமான சக்தியிடம், என்னை முழுவதுமாக ஒப்படைத்து விட்டேன். சுதந்திரம் என்றால் என்ன என்று அந்த வினாடி புரிந்தது. இந்த மருத்துவமனையில், எட்டு மாதங்களோ, நான்கு மாதங்களோ இல்லை இரண்டு ஆண்டுகளோ கூட இருக்க வேண்டி வரலாம்; பரவாயில்லை. முடிவு என்னவாக இருந்தாலும் சரி, தைரியமாக எதிர்த்து போராட வேண்டும் என, முடிவு செய்து விட்டேன்.என் பயணம் முழுவதும் நான் வெற்றி பெற வேண்டும் என்று அனைவரும் வாழ்த்துகின்றனர்; உலகம் முழுவதும் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் எனக்காக பிரார்த்தனை செய்கின்றனர். வெவ்வேறு இடங்கள், வேறு வேறு நேரம், பூகோளம் என, எனக்காக செய்யப்படும் வேண்டுதல்கள் அனைத்தும் ஒன்று திரண்டு, ஒரு மிகப் பெரிய சக்தி ஆகிவிட்டது. அந்த சக்தி, எனக்குள் புகுந்து, முதுகு தண்டின் கீழிருந்து கிளர்த்து வளர்ந்து, தலையில் கிரீடமாக இருக்கிறது. அதிலிருந்து கணுக்கள், இலை, கிளை, தண்டு என்று கிளர்வதை பார்க்கிறேன். ஒட்டு மொத்த பிரார்த்தனையில் இருந்து கிளர்ந்த ஒவ்வொரு பூவும், கிளையும், இலையும் எனக்குள் நம்பிக்கையையும், ஆர்வத்தையும், அதிசயத்தையும் தருகிறது.கடலலையில் சிக்கிய மரத்துண்டு, கடல் முழுவதையும் கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை; இருக்கும் இடத்திலேயே, இயற்கையின் மடியில் மெதுவாக ஆடிக் கொண்டிருந்தாலே போதும்.இர்பான் கான்பாலிவுட் நடிகர், லண்டன்.