மருத்துவ சிகிச்சையை மசாஜ் என்று சொல்வது குற்றம்!
ஆயுர்வேத மருத்துவ மையங்களில் செய்யப்படும் 'அப்யங்கம்' என்ற மருத்துவ சிகிச்சை முறையில், உடல் முழுதும் எண்ணெய் தேய்ப்பதால் ஆரோக்கியம் மேம்பட்டு, நோய்கள் நீங்குகின்றன.அழகு நிலையங்களிலும், மற்ற சில மையங்களிலும் தவறான அபிப்ராயத்தை தரும் விதமாக இதை, 'மசாஜ்' என்று சொல்கின்றனர். அண்ணா மருத்துவமனை, நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் சித்தா, ஆயுர்வேத மருத்துவமனைகளில், மசாஜ் என்ற வார்த்தையை பயன்படுத்தாமல் அப்யங்கம் என்று தான் சொல்கின்றனர்; அப்படித்தான் சொல்ல வேண்டும். காரணம், இது பாரம்பரிய மருத்துவத்தில் செய்யப்படும் மருத்துவ சிகிச்சை.உடலின் ஒவ்வொரு பாகத்திலும், 30 - 40 நிமிடங்கள் எண்ணெய் தேய்த்து, ஒத்தடம் தருவோம். எண்ணெய் தேய்க்கும் பழக்கமே இல்லாமல் போனதால், பல நோய்கள் வருகின்றன. எண்ணெய் தேய்ப்பதால், உடல் முழுதும் உள்ள நரம்பு மண்டலத்தை நமக்கே தெரியாமல் நாம் தொட்டுப் பார்க்கிறோம். தலையில் இருந்து கால் வரை எண்ணெய் தேய்க்கும் போது, குழந்தைக்கு தாய் தரும் அரவணைப்பு போல நம்மை நாமே அரவணைத்துக் கொள்கிறோம். இந்த தொடு உணர்வானது நரம்புகளை அமைதிப்படுத்தி, மன அழுத்தம், பதற்றத்தைக் குறைக்கிறது. 'ஸ்ட்ரெஸ் ஹார்மோன்' சுரப்பு குறைந்து, ஆரோக்கியமான ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கிறது. ரத்த நாளங்களில் அடைப்பு இருந்தால் அதை நீக்கி, ஆக்சிஜன் நிறைந்த நல்ல ரத்தம் எல்லா உள்ளுறுப்புகளுக்கும் செல்வதை மேம்படுத்தும். அசுத்த ரத்தத்தை வெளியேற்றவும் அப்யங்கம் உதவுகிறது.எண்ணெய் தேய்க்கும் போது, வியர்வை நாளங்கள் லேசாக மூட, உடலில் உஷ்ணம் அதிகமாகிறது. குளிக்கும் போது, வியர்வை நாளங்கள் திறந்து, வியர்வை நன்றாக வெளியில் வரும். இதன் மூலம் அதிகப்படியான உப்பு சத்து, தேவையற்ற கழிவுகள் வெளியில் வந்து விடும். எண்ணெய் சிகிச்சை முடிந்த பின், கழிக்கும் சிறு நீரின் வாசனை இயல்பாக இல்லாமல் வேறு மாதிரி இருக்கும். உடம்பில் உள்ள நச்சுக்கள் வெளியில் வருவதற்கான சான்று இது. அப்யங்கத்தில் பயன்படுத்தப்படும் சில எண்ணெய்கள், உடல் உள்செயல்பாடுகளை மேம்படுத்தி, கொழுப்பைக் கரைக்க உதவுகின்றன. ரத்த நாளங்கள் வழியாகச் செல்லும் தோஷங்களில் வாதம், கபம் இரண்டையும் கட்டுப்படுத்தி, இயல்பான ரத்த ஓட்டத்திற்கு கொண்டு வந்து, பித்தத்தை அதிகரித்து பசியைத் துாண்டும். சளி தொந்தரவு, சைனஸ் பிரச்னை, காய்ச்சல் இருந்தால் அப்யங்கம் செய்வது கூடாது. தலைவலி இருந்தால் அதற்கு தகுந்த எண்ணெய் பயன்படுத்த வேண்டும். முதல் முறையாக செய்பவர்களுக்கு, மூன்று நாட்கள் கஷாயம் கொடுத்து, உடலில் உள்ள கொழுப்பு, சில அசுத்தங்கள் எல்லாம் குறைந்த பின் தான் எண்ணெய் சிகிச்சை செய்ய வேண்டும். உடல் தன்மையை ஆராயாமல் செய்யும் எண்ணெய் சிகிச்சை, நோயை உண்டாக்கலாம். குழந்தை பருவத்தில் இருந்தே எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினால், நிறைய நன்மைகள் உள்ளன. பெண் குழந்தைகளுக்கு மாதவிடாய் சுழற்சி துவங்குவதற்கு முன், வாரம் இரு முறை நல்லெண்ணெய் தேய்த்து குளித்தால், மாதவிடாயின் போது ஏற்படும் வலி, மாதவிடாய் சுழற்சி ஒழுங்காக இருக்கும். வயிற்றில் மட்டும் தினமும் எண்ணெய் தடவினாலே வலி போய்விடும். தன்வந்திரி எண்ணெயை அனைவரும் பயன்படுத்தலாம். ஆனால், சிகிச்சையின் போது அவரவரின் உடல் தன்மை, வயது, தோஷங்களுக்கு ஏற்ற ஆயுர்வேத எண்ணெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும். டாக்டர் சுதீர் ஐயப்பன், டாக்டர் மீரா சுதீர், ஸ்ரீஹரீயம் ஆயுர்வேதம், சென்னை. 99623 50351, 86101 77899