இடுப்பெலும்பின் நிலை மாற்றிய நவீன வாழ்க்கை
ஒ ரு நாளின் பெரும்பாலான நேரங்களில், நாம் என்ன செய்கிறோம்? அது அலுவலகமோ, வீடோ... அமர்ந்த நிலையிலேயே தான் இருக்கிறோம். மொபைல் போனும், கம்ப்யூட்டரும் நம் நேரத்தை முழுவதும் ஆக்கிரமித்து கொள்கின்றன. வாக்கிங், ஜாக்கிங், யோகா என்று, ஒரு நாளில், அரை மணி நேரம் அல்லது, ஒரு மணி நேரம் செய்யும் உடற்பயிற்சி, நாள் முழுவதும் போதுமானதாக இல்லை. நாம் ஐபேட், மொபைல் போன், கம்ப்யூட்டருடன் மல்லுக்கட்டுவதால், ஆரோக்கியத்தைப் பதம் பார்க்கிறது. உட்கார்ந்தே இருக்கும் வாழ்க்கை முறை, அமர்ந்த நிலையிலேயே செய்யும் வேலை, அமர்ந்தபடியே பொழுதைப் போக்கும் அம்சங்கள்... இதன் விளைவு, சுறுசுறுப்பாக இருப்பதைவிட, உட்கார்ந்து இருக்கும் நேரம் அதிகமாகி விடுகிறது.இதனால் இதயநோய்கள், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் ஆகியவற்றோடு, பலவிதமான தசை நார் செயலின்மை, அதாவது, கை, முழங்கால், மூட்டு வலி, தலைவலி, மைக்ரேன் பிரச்னை, தோள்பட்டை, கழுத்து, முழங்கை, மணிக்கட்டு, கணுக்காலில் வலி ஏற்படுகிறது. இடுப்பு தான் பிரதானம்மூட்டு வலி, முதுகு வலி என்று, உடலில் எந்த பாகத்தில் வலி வந்தாலும், உடனடியாக வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்கிறோம். தொடர்ந்து வலி இருந்தால், 'எக்ஸ்-ரே, எம்.ஆர்.ஐ., ஸ்கேன்' முதுகு வலி நிவாரணத்திற்கென்றே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள மெத்தைகள், நாற்காலிகள், தினசரி பயன்படுத்த நவீன தொழில்நுட்ப கருவிகள், பலவிதமான தெரபிகள்... இப்படி தொடர்ந்து நாம் செய்யும் எந்த விஷயமும், முழுமையாக பலன் தருவதில்லை.காரணம், ''பிரச்னையின் மூலத்தை சரி செய்யாமல், வெறுமனே அறிகுறிகளுக்கு சிகிச்சை செய்து கொள்வது தான்,'' என்கிறார், இந்தியாவின் முதல் உடல் தோற்ற ஒழுங்கமைப்பு சிகிச்சை நிபுணர் பிரீத்தி பரத் மற்றும் டாக்டர் பரத் சங்கர்.உடலில் ஓரிடத்தில் ஏற்படும் வலி என்பது, அந்த பகுதியில் பிரச்னை உள்ளது என்பதை வெளிப்படுத்தும், ஒரு எச்சரிக்கை. அதே சமயத்தில் வலி ஏற்பட்ட இடத்தில் தான், பிரச்னை இருக்க வேண்டும் என்பதில்லை. வலிக்கான பிரச்னை வேறு இடத்தில் இருக்கலாம். அதைக் கண்டறிந்து, சரி செய்தால் வலி போய்விடும். பல மணி நேரங்கள் உட்கார்ந்தே இருப்போருக்கு, பல உடல் பிரச்னைகள் வருவதற்கு காரணம், இடுப்பு தான். நம் உடலின் அடித்தளம் இடுப்பெலும்பு. உட்கார்ந்து இருக்கும் போது, நம் மேல் உடம்பின் மொத்த எடையையும் தாங்குவது இடுப்பெலும்பு. அது நிலையாக இருப்பது முக்கியம். இடுப்பின் நிலைத்தன்மையில் பிரச்னை ஏற்படும்போது, பல்வேறு விதங்களில் வலியாக வெளிப்படுகிறது. நிற்கும்போது, நம் உடல் எடையைத் தாங்கும் வகையில் தான், கால் எலும்பு மூட்டுகள் உள்ளன. ஒரு நேரத்தில், இரண்டு கால்மூட்டுகளிலும் சமமான உடல் எடை விழ வேண்டும். பொதுவாகவே, நாம் இடது பக்க கால்களுக்கு, அதிக அளவு உடல் எடையை தாங்கும் விதமாகவே நிற்கிறோம். இதன் பாதிப்பு, இடுப்பு, முதுகெலும்பு, கழுத்து வரை செல்கிறது. உடல் ஒரே நேர்கோட்டில் இருக்கும்போது, 5.44 கிலோ எடை முதுகெலும்பில் இறங்குகிறது. இதுவே தலை முன்னோக்கி நகர, நகர முதுகெலும்பில் இறங்கும் எடை 15 முதல் 20 கிலோ வரை அதிகரிக்கும். பல மணி நேரம் தொடர்ந்து உட்கார்ந்து வேலை செய்யும்போதும், இதே பிரச்னை தான். இடுப்பெலும்பின் நடுநிலைத்தன்மை மாறி, கழுத்து, முதுகு, மூட்டுக்கள் என்று, பல இடங்களிலும் வலி ஏற்படுகிறது.இதற்கு என்ன தீர்வு?நம் உடலின் வடிவமைப்பே, இடம், வலம், முன், பின், மேல், கீழ் என்று, சமச்சீராக அசையும் விதத்தில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. தசைகள், எல்லா இடத்திலும் ஒரே மாதிரியாகவே இருக்கும். ஓடுவது, குதிப்பது, ஏறுவது, நிற்பது, உட்காருவது என்று, என்ன செய்தாலும் தசைகளின் இயக்கத்திற்கு ஏற்ப தான், எலும்புகள் வேலை செய்யும். தசைகளின் செயல்பாடு சீரற்றதாக இருந்தால், எலும்புகள் தன் நிலையிலிருந்து மாறி இயங்கும். முடிவு, மூட்டுகளில் வலி. இன்னொரு விஷயம், நம் உடலில் இரண்டு விதமான கால்சியம் இருக்கிறது. ஒன்று எலும்புகளுக்கு வலுவூட்டக்கூடிய ஊட்டச்சத்து கால்சியம். மற்றொன்று, மூட்டுக்களில் ஏற்படும் உராய்வு தன்மையிலிருந்து பாதுகாப்பு தரக்கூடிய கால்சியம். எலும்புகளின் நிலைத்தன்மை மாறும்போது, குறிப்பிட்ட இடத்தில், இந்த பாதுகாப்பு கால்சியம் அப்படியே படிந்து, நரம்புகளுக்கு அழுத்தம் கொடுக்கும். இதனால் தான் மூட்டுக்களில் வலி ஏற்படுகிறது. அறுவை சிகிச்சை செய்யும்போது, இந்த அதிகப்படியான கால்சியத்தை எடுத்து விடுவர். ஆனால் பிரச்னையின் மூலம், அதாவது எலும்புகள், தன் நிலையில் இருந்து மாறி இருப்பது, அப்படியே தான் இருக்கும்.இந்த பிரச்னைக்கு, இடுப்பெலும்பின் நடுநிலையை சரி செய்வது தான் ஒரே தீர்வு. வலி பாதிப்பு உள்ளவர்களை நேராக நிற்க வைத்து, ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும். இதற்கென்றே உருவாக்கப்பட்டுள்ள பிரத்யேக மென்பொருள் உதவியுடன், மூட்டுக்கள் ஒரே நேர்கோட்டில் இருக்கிறதா, அல்லது எவ்வளவு துாரம் விலகியிருக்கிறது என்பதை கண்டறிய வேண்டும். இதை சரி செய்வதற்கான உடற்பயிற்சிகள் உள்ளன. அவற்றை தொடர்ந்து செய்தால், வலியில் இருந்து முழுவதும் நிவாரணம் பெறலாம்.இந்த பயிற்சியின் மூலம், உடலானது நேர்கோட்டிற்கு கொண்டு வரப்படும். சில நிமிடங்களில் வலி குறைந்து விடும். பாதிப்பு சரியாவதற்கு, சில நாட்கள் ஆகலாம். எலும்பு தேய்மானத்திற்கும், இதுபோல நிலைத்தன்மை மாறுவதால் ஏற்படும் வலிக்கும் தொடர்பில்லை.உடலில் ஓரிடத்தில் ஏற்படும் வலி என்பது, அந்த பகுதியில் பிரச்னை உள்ளது என்பதை வெளிப்படுத்தும், ஒரு எச்சரிக்கை. அதே சமயத்தில் வலி ஏற்பட்ட இடத்தில் தான், பிரச்னை இருக்க வேண்டும் என்பதில்லை.தொடர்புக்கு: 91769 97621