கேள்வி - பதில்
கடந்த வாரம் ஒரு நாள், என் குழந்தைக்கு, காலையில் எழுந்தவுடன் உடல் சூடாக இருப்பது போல இருந்தது. நாள் முழுவதும் தொடர்ந்து காய்ச்சல் இருந்ததால், பாரசிட்டமால் மாத்திரை கொடுத்தேன். காய்ச்சல் குறைந்துவிட்டது என்றாலும், கை, கால்களில் சிறுசிறு கொப்புளங்கள் வந்துவிட்டன. அம்மையாக இருக்குமோ என்று பயந்து, டாக்டரிடம் காட்டினேன். அம்மை இல்லை என்று சொல்லி விட்டார். குழந்தைக்கு சரியாகி விட்டது. இருந்தாலும், எனக்கு அம்மையாக இருக்குமோ என்ற சந்தேகம் இருக்கிறது. என்ன செய்யலாம்?மதுபாலா, சேலம்.உங்கள் குழந்தைக்கு வந்திருப்பது, 'ஹேண்ட், புட், மவுத் டிசீஸ்!' இது சமீப காலத்தில், குழந்தைகளை அதிகம் பாதிக்கிறது. தொற்று நோயான இது, விரைவில் பரவக்கூடியது. நிறைய குழந்தைகளோடு வகுப்பறையில் இருக்கும்போது, பாதித்த குழந்தையிடம் இருந்து வந்திருக்கலாம். குணமாவதற்கு, 5 முதல் 7 நாட்கள் ஆகலாம். கை, கால்களில் மட்டுமல்லாது, உடலில் எந்த பாகத்திலும், வியர்க்குரு போன்ற நீர் கோர்த்து கொப்புளங்களாக இது வரலாம். 100 டிகிரிக்கு மேல் காய்ச்சல், தொண்டை வறண்டு போவது, இந்த நோய்க்கான அறிகுறிகள். சில குழந்தைகளுக்கு, கொப்புளங்கள் முதலில் வந்து அறிகுறிகள் பின்னால் வருவதும் உண்டு. இதற்கென்று பிரத்யேக மருந்துகளோ, சிகிச்சையோ கிடையாது. வைரஸ் தொற்றிற்கான சிகிச்சை தான் இதற்கும் தருகிறோம்.பாதிக்கப்பட்ட குழந்தையை தனிமைப்படுத்தி சுகாதாரமான சூழலில் வைத்திருந்து, மருத்துவர் ஆலோசனையுடன் கவனித்துக் கொள்ள வேண்டும். அம்மை என்று நினைத்து, மருத்துவ சிகிச்சை பெறாமல் இருப்பது கூடாது.டாக்டர் ஜனனி சங்கர், குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர்.எனக்கு அடிக்கடி நெஞ்செரிச்சல் வருகிறது. சில சமயங்களில், நெஞ்சுப் பகுதி முழுவதும் ஊசியால் குத்துவது போல உள்ளது. இப்படி இருக்கும் சமயத்தில், ஈ.சி.ஜி., எடுத்தேன். இதயத்தில் எந்த பிரச்னையும் இல்லை என்று டாக்டர் சொல்லி விட்டார். பிரச்னை வரும் நேரங்களில் பதற்றமாக உள்ளது. சரியான ஆலோசனை சொல்லுங்கள் டாக்டர்.சுந்தரம், கோவை.உணவு செரிமானத்திற்காக, இரைப்பையில் சுரக்கும் அமிலம், சில சமயங்களில் மேல் நோக்கி உணவுக் குழாயில் வரும்போது, நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது. ஜீரண அமிலம் எல்லாருக்கும் ஒரே மாதிரி சுரப்பதில்லை. சிலருக்கு சரியான அளவிலும், சிலருக்கு குறைவாகவும் சுரக்கிறது. சிகரெட், மதுப்பழக்கம் இருந்தால், இந்தப் பிரச்னை வரலாம். சிட்ரிக் அமிலம் அதிகம் உள்ள உணவுகள், பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள், கொழுப்பு அதிகம் உள்ள உணவு, அதிக அமில சுரப்பிற்கு காரணமாகலாம். வயிறு முழுக்க சாப்பிடாமல், அரை வயிறு அல்லது முக்கால் வயிறு சாப்பிடுங்கள். மூன்று வேளை சாப்பிடுவதைப் பிரித்து, ஆறு வேளையாக சாப்பிடுங்கள். தூங்குவதற்கு இரண்டு மணி நேரம் முன்பே இரவு உணவை முடித்து விடுங்கள். மனஅழுத்தம், மனப்பதற்றம் போன்றவற்றாலும் வயிற்றில் பிரச்னை வரலாம் என்பதால், யோகா, தியானம் செய்யுங்கள். வாரத்திற்கு, ஐந்து நாட்களாவது உடற்பயிற்சி செய்யுங்கள். இவையெல்லாம் பின்பற்றியும் பிரச்னை சரியாகவில்லை என்றால், உடனடியாக மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.டாக்டர் ராதாகிருஷ்ணன்,குடல், இரைப்பை சிறப்பு மருத்துவர்.