கேள்வி - பதில்
நான் நீரிழிவு நோயாளி. சமீபத்தில் ஒரு புத்தகத்தில், நீரிழிவு நோயாளிகள் வாழைப்பழம் சாப்பிட்டால், ஆபத்து என்று படித்தேன். உண்மையா?எஸ்.சந்திரசேகர், கோவை.சர்க்கரை நோய் பற்றி, பல தவறான அபிப்ராயங்கள் உள்ளன. அதில் ஒன்று இது. சர்க்கரை நோய் இருந்தால், வாழைப்பழம் சாப்பிடக் கூடாது என்று எந்த ஆய்வும், இதுவரை உறுதி செய்யவில்லை. மேலும், அவரவர் உடலின் தன்மையைப் பொறுத்தே, எந்த உணவு சாப்பிடலாம், சாப்பிடக் கூடாது என்பதை முடிவு செய்ய முடியும். நீங்கள் செய்ய வேண்டியது, வாழைப்பழம் உங்கள் உடம்பிற்கு ஒத்துக் கொள்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும். யாராக இருந்தாலும், அவரவரின் உடல் தன்மைக்கு, செயல்பாட்டிற்கு ஏற்ப உணவு சாப்பிட்டால், எந்தப் பிரச்னையும் வராது. இதய செயல்பாடு, இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு போன்ற விஷயங்களில், நம் ஒவ்வொருவரின் உடலும், ஒரு குறிப்பிட்ட அளவில் சீராக வைத்திருக்கவே முயற்சி செய்யும். சில சமயங்களில், தேவையில்லாத சத்துக்கள் உடலில் சேரும்போது, சர்க்கரை அளவு அதிகரித்து, உடலின் செயற்பாடுகளில் மாற்றம் தெரியும். நீரிழிவு நோயாளிகள், சர்க்கரை சாப்பிடக் கூடாது என்று சொல்கிறோம். அப்படி என்றால் மற்றவர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்ற அர்த்தமா? இல்லையே. சர்க்கரையில் எந்த சத்தும் கிடையாது. வெறும் கலோரி மட்டுமே உள்ளது. அதனால், சர்க்கரையால் யாருக்கும், எந்த பலனும் இல்லை.காலை உணவிற்குப் பின், ஒரு வாழைப்பழம் சாப்பிடுங்கள். இரண்டு மணி நேரம் கழித்து, உங்கள் ரத்த சர்க்கரையின் அளவு ௧௪௦ மி.கி.,/.டி.சி.,க்கு குறைவாக இருந்தால், நீங்கள் தாராளமாக வாழைப்பழம் சாப்பிடலாம். வாழைப்பழத்தில் பொட்டாசியம் சத்து அதிகம். இது ரத்த அழுத்தத்திற்கு நல்லது. டாக்டர் ஜெயஸ்ரீ கோபால்சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர், அப்பல்லோ மருத்துவமனை, சென்னை.என் வயது 40 'ஹேர் டை' அடித்துக் கொள்ள ஆசையாக உள்ளது. ஆனால், ஒருமுறை பயன்படுத்தினால், தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். அதில் உள்ள வேதிப் பொருட்களால், நிறைய பின் விளைவுகள் ஏற்படும் என்று சொல்லப்படுகிறதே. எனக்கு ஒரு சரியான தீர்வு சொல்லுங்கள் டாக்டர்.ரா.சங்கர், திருப்பூர்.சில, 'ஹேர் டை'யில் இருக்கும் வேதிப் பொருட்களால், அலர்ஜி, தடிப்பு, முகம் கறுத்தல் போன்ற பிரச்னைகள் வருவது, தற்போது அதிகரித்து உள்ளது உண்மைதான். தற்போது உள்ள, 'காஸ்மெடிக்' உலகத்தில், 'ஹேர் டை', அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தவே கூடாது என்று சொல்வது, சாத்தியமில்லாத ஒன்று. பாதுகாப்பாக எப்படி பயன்படுத்துவது என்பதை தெரிந்து கொள்வதே முக்கியம். 'கெமிக்கல்' எல்லாம் ஆபத்து, 'ஹெர்பல்' எல்லாம் பாதுகாப்பானது என்ற அபிப்ராயமும், சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது. இதுவும் தவறு. நாம் தெரிந்து கொள்ள வேண்டியது, எந்தப் பொருள் நம் சருமத்திற்கு ஒத்துவரும் என்பதை தெரிந்து, பயன்படுத்த வேண்டும். 'ஹேர் டை' ஒத்துக் கொள்ளாவிட்டால், சிறிய கொப்புளங்கள் வரலாம். முகத்தின் இரு பக்கங்களிலும் கறுக்கும். சிலருக்கு முகம் முழுக்க கறுப்பதும் உண்டு. தோல் தடித்து அரிப்பு வரலாம். இந்த பிரச்னைகள் எல்லாம், வெறும் ௧௦ சதவீதம் பேருக்கே வருகிறது. 'ஹேர் டை'யில் உள்ள ppd யின் அளவு, 100 மி.லி., ஹேர் டையில், ௨.௫ என்ற அளவிற்கு குறைவாக இருக்க வேண்டும். அமோனியா எதன் மீது பட்டாலும், அதை அரிக்கும் தன்மை கொண்டது என்பதால், அமோனியா இல்லாத 'ஹேர் டை'யாக இருப்பதும் நல்லது. மாதம் ஒரு முறை மட்டும் 'ஹேர் டை' பயன்படுத்தலாம். யன்படுத்திய அன்று வெயிலில் போகாமல் இருப்பது நல்லது.டாக்டர் ஜி.ஆர்.ரத்தினவேல்தலைவர், தோல் நோய் பிரிவு, ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை. சென்னை.