போலிக் அமில மாத்திரையை விட சத்தான அரிசி கஞ்சி!
சமீப காலங்களில் உடலாலும், மனதாலும் பெண்கள் பல உபாதைகளுக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பிட்ட வயதிற்கு முன்னரே பெண் குழந்தைகள் வயதுக்கு வந்து விடுவது, தற்போது பொதுவான விஷயமாகி விட்டது. உணவுப் பழக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், இரவில் வெகு நேரம் கண் விழித்திருப்பது, மின்னணு சாதனங்களை அதிக அளவு பயன்படுத்துவதால ஏற்படும் பாதிப்பு போன்றவை இதற்கு முக்கிய காரணங்கள்.அதிக இனிப்பு பண்டங்கள், குறிப்பாக கடைகளில் விற்கப்படும் இனிப்பு வகைகள், 'பீட்சா, பர்கர்' போன்ற எளிதில் செரிமானம் ஆகாத உணவுகள், எண்ணெயில் பொரித்த பண்டங்களை பெண் குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. கண் மை, லிப்ஸ்டிக், முகத்தில் பூசப்படும் கிரீம்கள் என்று எந்த அழகு சாதனப் பொருட்களையும் குழந்தைகளுக்கு பயன்படுத்தக் கூடாது. இவற்றால் ஏற்படும் பாதிப்புகள் அதிகம்.வயதிற்கு வந்த பின், குழந்தைகளுக்கு கருப்பட்டி, கறுப்பு உளுந்து சேர்த்த களியை வாரம் ஒரு முறையாவது கொடுப்பது அவசியம்; இது, இடுப்பு எலும்பு, தசைகளை வலிமைப்படுத்த உதவும். மாதவிடாய் நேரத்தில் சில குழந்தைகளுக்கு தாங்க முடியாத வலி இருக்கலாம். இதற்கு வலி நிவாரணிகள் தருவதை தவிர்த்து, புளிக்காத தயிரில் சில சொட்டுகள் எலுமிச்சை சாறு பிழிந்து தந்தால், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி ஓரளவு குறையும். ஒழுங்கான உதிரப்போக்கு இல்லாவிட்டால், பீர்க்கங்காயின் சதைப் பகுதியை சிறிது எடுத்து, அதனுடன் இரண்டு சிட்டிகை பெருங்காயத் துாள் சேர்த்து சாப்பிடச் சொல்லலாம். இதை, வெறும் வயிற்றில் மூன்று, ஐந்து நாட்கள் எடுத்தால் உதிரப்போக்கு ஒழுங்காகும்.மாதவிடாய் சுழற்சியில் மாற்றம் ஏற்பட்டு சீரற்ற மாதவிடாய் வந்தால், கால் டம்ளர் சதைக்குப்பையில் அரை டம்ளர் நீர் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கொதிக்க வைத்து, குளிர்ந்த பின் வெறும் வயிற்றில் மூன்று, ஐந்து நாட்களுக்கு கொடுக்கலாம். அதிக ரத்தப் போக்கு இருந்தால் நெய் அல்லது வெண்ணெயுடன், மஞ்சள் பொடி அரை டீஸ்பூன் சேர்த்து குழைத்து மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை, மூன்று நாட்களுக்கு எடுத்துக் கொள்ளலாம். உடல் பலவீனம், ரத்த சோகை இருந்தால் வெள்ளைபடுதல் அதிகமாக இருக்கும். இதற்கு பச்சை சுண்டைக்காய், கோவைக்காய், வெள்ளை பூசணி போன்றவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அசைவ உணவில் கல்லீரல், மண்ணீரல் இரண்டும் வெள்ளை படுதலுக்கு சிறந்த மருந்தாகும். அது போல கடுக்காய் பொடி அரை டீஸ்பூன் எடுத்து, அரை லிட்டர் நீரில் கலந்து, ஜனனப் பகுதியை கழுவுவதும் தீர்வைத் தரும். கர்ப்பிணிகள் புழுங்கல் அரிசி சாதம் வடித்த நீரில், இரண்டு சொட்டு நெய் விட்டு காலையில் குடிக்கலாம். இது, போலிக் அமில மாத்திரையைக் காட்டிலும், பல மடங்கு அதிக பலன் தரும். மாதவிடாய் நிற்கும் சமயத்தில், சத்தான காய்கறிகள், பழங்கள், பச்சைப் பயறு, கறுப்பு சுண்டல் வேக வைத்த தண்ணீரை எடுத்துக் கொள்வது நல்லது. வாரத்திற்கு இரண்டொரு நாட்கள் பிரண்டைத் துவையல் சாப்பிடலாம். நாற்பது வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு இருக்கும் பொதுவான பிரச்னை, சிறுநீர்க் கசிவு. இதற்கு காலை, மாலை இரண்டு நிமிடங்கள் பின்பக்கமாக நடப்பது சிறப்பானது. தலைமுடி உதிரும் பிரச்னைக்கு, தோல் சீவி சிறு துண்டுகளாக்கிய இஞ்சியை தேனில் ஊற வைத்து, காலை வெறும் வயிற்றில், 48 நாட்கள் சாப்பிடலாம். மலச்சிக்கல் பிரச்னை இருந்தால், தலையில் பொடுகு தொல்லை வரும். இதற்கு கடுக்காய் அல்லது திரிபலா சூரணப் பொடியை அரை ஸ்பூன் வென்னீரில் கலந்து, 21 நாட்கள் இரவில் துாங்கப் போவதற்கு முன் குடிக்கலாம். எளிதாக செரிமானம் ஆகும் உணவுகள், நல்ல துாக்கம் இவை தான் முதுமையில் ஆரோக்கியத்தை தரும். குடும்ப பாரத்தை சுமக்கும் போது, மனதளவில் ஏற்படும் பாதிப்புகள் உடல் நலத்தையும் பாதிக்கிறது. 20 நிமிட நடைபயிற்சி, நண்பர்களுடன் பேசுவது, ஊற வைத்து தோல் நீக்கிய நான்கு பாதாம் தினசரி சாப்பிடுவது என்று பிரத்யேகமாக தினமும் ஒரு மணி நேரத்தை, பெண்கள் தங்களுக்காக செலவிடுவது, உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும்.-டாக்டர் மது கார்த்தீஷ்.க, சித்த மருத்துவர், சென்னை.99944 93687