உள்ளூர் செய்திகள்

 தமிழகத்தில் அதிகரிக்கும் நீரிழிவு நோய்!

தேசிய குடும்ப சுகாதார ஆய்வு- உட்பட சமீபத்தில் வெளியான பொது சுகாதார ஆய்வறிக்கைகள் அனைத்துமே, தமிழகத்தில் 50 வயதிற்கு மேற்பட்ட ஆண்களிடையே சர்க்கரை நோய் அதிகரித்து வருவதாக கூறுகிறது. என்ன காரணம்? பத்து ஆண்டுகளுக்கு முன் வரை, 45 வயதிற்கு மேற்பட்டவர்களே, நீரிழிவு நோய் பாதிப்புடன் வருவர். இன்று, 30 வயதிலேயே இரண்டு விதமான நீரிழிவு நோயாளிகள் அதிகரித்து விட்டனர். இளம் வயதிலேயே நீரிழிவு நோய் பாதிப்பு ஏற்பட்டால், வாழ்நாள் முழுதும் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். நீண்ட காலம் நீரிழிவு நோய் இருந்தால், கண்கள், கால்கள், சிறுநீரகங்கள், இதயம் என்று அனைத்து உறுப்புகளும் பாதிக்கப்படும். ஒல்லியான உடல்வாகு இருப்பவர்களுக்கும், அடிவயிற்றில் கொழுப்பு அதிகமாக இருக்கிறது. காரணம், நம்முடைய மரபணுவில், அதிகப்படியான கொழுப்பு முதலில் இடுப்பு, வயிற்றுப் பகுதியைச் சுற்றியே சேருகிறது; இதனால், நாளடைவில், முழுமையாக இன்சுலின் செயல்படாத தன்மை ஏற்படுகிறது. முன்பெல்லாம் நகர்ப்புறங் களில் மட்டுமே நீரிழிவு நோய் பாதிப்பு இருப்பதாக சொல்வர். இன்று, நகர்ப்புறம், கிராமப்புறம் என்ற வேறுபாடில்லாமல் இரு இடங்களிலும் நீரிழிவு நோயாளிகள் இருப்பதை நான் பார்க்கிறேன். ஐந்தில் ஒருவர், நீரிழிவு நோய்க்கான சிகிச்சை எடுப்பதாக தேசிய குடும்ப நல ஆய்வறிக்கை கூறுகிறது. இந்தப் பகுதிகளில் வாழ்க்கை முறை மாற்றம் மிக வேகமாக நடந்துள்ளது. குறைந்த உடற்பயிற்சி, பதப்படுத்தப்பட்ட உணவுகளின் பயன்பாடு அதிகரிப்பு மற்றும் உட்கார்ந்தபடியே இருக்கும் வாழ்க்கை முறை ஆகியவை இனி நகரங்களுக்கு மட்டுமே உரியதாக இல்லை. நகர்ப்புற வாழ்க்கை முறைகள் பின்பற்றும் கிராமப்புறங்களிலும் நீரிழிவு நோய் அதிகரித்து வருகிறது. பாரம்பரிய இந்திய உணவுகள் ஆரோக்கியமானதாக இருந்தாலும், அவை பெரும்பாலும் கார்போஹைட்ரேட் அதிகமாகவும், புரதம் குறைவாகவும் இருக்கின்றன. அதே நேரத்தில், இதற்கு மாறாக சமச்சீரான உணவுகளுக்கு செலவிடுவதை விட, சுத்திகரிக்கப்பட்ட, பதப்படுத்தி, பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகளின் விலை மலிவாக உள்ளது. குறைந்த உடற்பயிற்சி மற்றும் அதிகரிக்கும் மன அழுத்தத்துடன், இந்த புதிய உணவுப் பழக்கமும் சேர்ந்து, சர்க்கரைக் கோளாறை உண்டாக்குகிறது. தேசிய குடும்ப சுகாதார ஆய்வறிக்கையில் குறிப்பிட்டது போன்று, என்னுடைய மருத்துவப் பயிற்சியில், நீரிழிவு நோயால் பாதிக்கப்படும் ஆண் நோயாளிகளை தினமும் பார்க்கிறேன். குறிப்பாக, கிராமப்புற பெண்களிடையே இந்த பாதிப்பு வேகமாக அதிகரிப்பது எனக்கு வருத்தம் அளிக்கிறது. தடுப்பு முறைகள் ஆரம்பகால பரிசோதனைகள், நீரிழிவு நோய் பற்றிய புரிதல், ஆரோக்கியமான உணவுப் பழக்கம், தினசரி உடற்பயிற்சி ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டிய அவசரத் தேவை நமக்கு ஏற்ப்பட்டு உள்ளது. ஒட்டுமொத்தமாக, தமிழகம், சர்வதேச, தேசிய அளவில் ஏற்படும் மாற்றங்களை பிரதிபலிக்கிறது. டாக்டர் நந்திதா ராமச்சந்திரன், இயக்குநர், டாக்டர் ஏ. ராமச்சந்திரன் நீரிழிவு மையம், சென்னை 044 42162003, 89255 00665 diahome.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !