சுயமரியாதை மனிதனின் பிறப்புரிமை!
மனிதனுக்கு எல்லாவற்றையும்விட முக்கியமான உணர்ச்சி, தன்மானம் தான்!மான, அவமானம் என்னும் தன்மானமாகிய சுய மரியாதை தான் அவனது பிறப்புரிமை என, கொள்ள வேண்டி இருக்கிறது.மனிதன் என்ற சொல்லே, 'மனம்' என்ற சொல்லில் இருந்து வந்தது தான். மனதில் இருந்து பிறப்பதே, மானம். எனவே, மனிதனிடம், மனித தன்மை இருப்பதற்கு காரணம், தன்மானம். அந்த தன்மானமாகிய சுயமரியாதையைத்தான் மனிதன் பிறப்புரிமையாகக் கொண்டிருக்கிறான்.ஒவ்வொரு உயிரினமும், உலகத்தில் உள்ள ஏனைய உயிரினங்கள் பற்றிய கருத்து மற்றும் கணிப்பு வைத்திருக்கும். அந்த கணிப்பிற்கு ஏற்ப ஒரு மதிப்பீட்டை, அந்த உயிரினம் பெறுகிறது. மதிப்பீட்டிற்கு ஏற்ப, மரியாதை மற்றும் கவுரவம் கிடைக்கிறது. மனிதன், அதற்கு மேலே சென்று, தன்னைப் பற்றி சுயமதிப்பீடு செய்கிறான். சுய மதிப்பீட்டின் அளவிற்கு ஏற்ப, சுயமரியாதை மற்றும் சுய கவுரவம் கிடைக்கிறது. பொதுவாகவே மனிதன், தான் ஏனையோர் நிலைக்கு உயர வேண்டும்; மற்றோர் தன்னைப் பாராட்டி புகழவேண்டும் என, எதிர்பார்க்கிறான். ஏனையோரின் கணிப்பு நியாயமானது; சரியானது என, உறுதி அளிக்க முடியாது. அது அவரவர்களின் தேவை மற்றும் கட்டாயத்திற்கு ஏற்ப மாறுபடும். சுயமரியாதை தான் தன்னம்பிக்கை மற்றும் தைரியத்திற்கு, வெற்றிக்கு வழி வகுக்கும்; நிலைத்திருக்கும்; நிம்மதி அளிக்கும். எனவே சுய மதிப்பீடு செய்வது, சுய மரியாதையோடு வாழ்வது இன்றியமையாதது.- மா. திருநாவுக்கரசு, மனநல மருத்துவர், மனநலம் கிளினிக், சென்னைபோன்: 94440 34647