கனவு தவிர்... நிஜமாய் நில்!: ஏக்கம் ஒரு பக்கம்; தயக்கம் மறுபக்கம்...!
உடல் பருமன் குறைப்பு ஆலோசனைக்கு, என்னிடம் வந்தவர் சரிதா. அன்றும் வந்தார். என்னுடைய சக சத்துணவு ஆலோசகர் தேஜலுடன், நாங்கள் கொடுத்த ஆலோசனை, உணவு அட்டவணையில், அடுத்த இரண்டு வாரங்களுக்கு பின்பற்ற, மாற்ற வேண்டியது குறித்து ஆலோசனை செய்தனர். சற்று துாரத்தில் அமர்ந்திருந்த நான், அவர்கள் பேசி முடித்தவுடன், 'சரிதா, அழகாயிட்டே வர்றே' என்றேன்.சற்றே சலிப்புடன், 'எப்பவும் நீங்க மட்டும் தான் இதை சொல்றீங்க' என்றார். 'ஏன்... சற்று முன் தேஜல் சொன்னாரே' என்றேன். 'ஆமாம்' என்றார். 'எடை குறைய குறைய, பார்ப்பதற்கே அழகாக தெரியுற... உனக்கு, நல்ல மசாலா டீ போட்டு தரப் போறேன்' என்றவுடன், 'என் பலவீனம் என்ன என்று சரியா புரிஞ்சு வச்சிட்டு சொல்றீங்க; மசாலா டீ என்றால், வேண்டாம் என்று சொல்லவே முடியாது.'உங்களிடம் ஆலோசனைக்கு வந்த பின், காலையில் டீ குடிப்பதில்லை; வாழைப்பழம் தான் சாப்பிடுகிறேன். ஆனாலும், ஒரு நாளில் எட்டு டம்ளர் டீ குடித்த நான், இப்போது, நான்கு டம்ளர் குடிக்கிறேன். இந்த பழக்கத்தில் இருந்து வெளியில் வர முடியவில்லை' என்றார், விரக்தியாக.'ஆசிரியர் குடும்பத்தில் இருந்து வந்தவரா நீங்கள்?' என்றதற்கு, 'ஆமாம், என் அம்மா டீச்சர் தான்' என்றார்.'அதனால் தான் எப்போதும் விமர்சனம் செய்தபடியே இருக்கிறீர்கள். உங்களிடம் ஏற்பட்ட முன்னேற்றத்தை பார்க்காமல், எட்டு டம்ளர் டீ குடிப்பது, எட்டு ஆண்டு பழக்கம்; ஒரே மாதத்தில், பாதியாக குறைந்து விட்டது. அதை நினைக்காமல், ஏன் செய்யாததையே குற்றமாக பார்க்க வேண்டும்?' என்றேன்.'எப்படி அப்படி நினைக்க முடியும்... 'டயட்' அட்டவணையில், ஒரு நாளைக்கு இரண்டு கப் தான் குடிக்க வேண்டும் என்று உள்ளது' என்றார், விடாமல். 'இருக்கட்டும்... உணவு அட்டவணை என்பது, ஒரு வழிகாட்டி மட்டுமே; பின்பற்றியே ஆக வேண்டிய சட்டம் இல்லை. ஒரு மாதமாக தான் என்னுடைய ஆலோசனையை பின்பற்றுகிறாய். 'ஒரு மாதத்தில், டீ குடிப்பதை பாதியாக குறைத்திருப்பது, நல்ல முன்னேற்றம்; எட்டு கப் - ஏழாக குறைந்திருந்தாலும் நல்லது தான். சரியான பாதையில் செல்லும் ஒவ்வொரு படியும் முன்னேற்றம் தான்' என்றவுடன், அழ ஆரம்பித்து விட்டார்.அழுதபடியே, 'என் கணவர், 'காலையில் வெயிட் குறைத்தவுடன், முகத்தில் ஒரு பொலிவு வந்து விட்டது; வயிறு, தொடையில் சதை குறைந்து, உருவமே அழகாகி விட்டது' என்றார். உடனே, நான் என்ன சொன்னேன் தெரியுமா?' என்றார்.'யூகிக்க முடியும்... திட்டியிருப்பாய்' என்றேன்.'ஆமாம்... 'ஏதாவது சொல்லணு மேன்னு சொல்லாதே... உன் இரக்கம் எல்லாம் எனக்கு வேண்டாம்; வேலையை பாரு' என்று சொன்னேன்' என்றார்.நம்முடைய பிரச்னையே இது தான். நம்மை நாமே விமர்சனம் செய்வோம் அல்லது யாராவது செய்யும் விமர்சனங்களை நம்புவோம். விமர்சனத்தை வரவேற்கும் மனநிலை, பாராட்டும் போது இருப்பதில்லை. ஒரு பக்கம் அன்பு, பாராட்டு வேண்டும் என்று ஏங்குவோம்; கிடைத்தால் ஏற்றுக் கொள்ள தயங்குவோம், சரிதாவைப் போலவே!உடல் பருமனில் இருந்து மட்டுமல்ல, இந்த மனநிலையில் இருந்தும் வெளியில் வர வேண்டும்.ருஜுதா திவேகர்நியூட்ரிஷனிஷ்ட், மும்பை.www.rujutadiwekar.com