சளியை ஓட ஓட விரட்டும் துளசி
துளசி ஒரு மருத்துவ செடி மட்டுமல்ல; தெய்வீகத் தன்மையும் நிறைந்திருப்பதால் வீட்டின் முன் மாடத்தில் துளசியை நட்டு பூஜிப்பது வழக்கம். துளசிகளில் வெண்துளசியும், கருந்துளசியும் அதிகமாக காணப்படுகின்றன. வெண்துளசியின் இலை, தண்டு, காம்பு ஆகியவை வெண்மை கலந்த பச்சை நிறமாகவும், கருந்துளசியின் இலை, தண்டு, காம்பு ஆகியவை கருஞ்சிவப்பு ஏறிய பச்சை நிறமாகவும் காணப்படும். இவ்விரண்டு வகை துளசியும் குணங்களில் அதிக வேறுபாடு இல்லாதவை. உடல் சூட்டை சமச்சீராக வைக்கும் திறன் அதற்கு உண்டு. இறுகியுள்ள மார்ச்சளியை நீர்க்கச் செய்து, கபத்தை வெளிக் கொண்டு வருவதால் கபத்தினாலும் உமிழ்நீராலும் ஏற்படும் துர்நாற்றத்தை நீக்கிவிடும். துளசியை மென்று தின்பதால், பசித்தீயை கொழுந்து விட்டு எரியச் செய்யும். இருமல், மூச்சுத்திணறல், நுரையீரலில் ஏற்பட்டுள்ள கபக்கட்டினால் உண்டாகும் விலாவலி, ஜலதோஷம், குழந்தைகளுக்கு இதன் மூலமாக ஏற்படும் பசிமந்தம், காரணம் புரியாத அழுகை, உடலை முறுக்கி அழுதல், உடல் வலி போன்ற நிலைகளில் துளசிச் சாற்றுடன் தேன் கலந்து கொடுப்பதால், அதிசயத்தக்கப் பலனை துளசி உண்டாக்கி, ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இன்புளூயன்ஸா, மலேரியாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, துளசியை போட்டு கொதிக்க வைத்து, வெதுவெதுப்பான தண்ணீரை அருந்தச் செய்ய வேண்டும். துளசியை வெந்நீருடன் அரைத்து, நெற்றியில் பற்று இடுவதால் தலைபாரம், தலைவலி ஆகியவை குறைந்துவிடும். துளசியின் மணம் அபாரமான மனத்தெம்பு அளிக்கிறது. உடல் பகுதிகள் அழுகல், கிருமிகள் ஆகியவற்றை துளசியை உபயோகித்து நீக்கலாம். தேமல், படை, எச்சில் தழும்பு, காணாக்கடி போன்றவற்றில் துளசியை அரைத்து பற்று இடுதல், சாறு அல்லது கஷாயமாக்கி குடிப்பதால் அவ்வகை நோய்கள் நீங்கிவிடும். துளசி சாறு அரை முதல், 2 ஸ்பூன் வரை குழந்தைகளுக்கும் கால் முதல் அரை அவுன்ஸ் பெரியவர்களும், சூர்ணம், 24 சிட்டிகை குழந்தைக்கும், அரை முதல் 1 அவுன்ஸ் பெரியவர்களும், காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம். துளசி, மிளகு, தும்பை இலை ஆகியவற்றை, கஷாயம் செய்து பருகுவதால் குளிர்ஜுரம், வாயுவினால் ஏற்படும் குடைச்சல் நீங்கும். அஜீரணம், வாயுப்பொருமல், வயிறு உப்புசம், வலி, அஜீரணபேதி, கீரைப்பூச்சி, பூச்சிகளால் ஏற்படும் பேதி ஆகியவற்றில் துளசியுடன் ஓமம் சேர்த்து சாப்பிட்டால் போதும்.வயிறு பிரச்னைகளுக்கு, ஓமத்தை துளசி சாற்றில் ஊற வைத்து, நிழலில் உலர்த்தி, தூள் செய்து சாப்பிடலாம். துளசி, ஓமம் ஆகியவற்றை தண்ணீரில் அரைத்து, வடிகட்டி, தேன் சர்க்கரை கலந்தும் சாப்பிடலாம். வெற்றிலைச் சாறுடன் துளசி சாறும் கலந்து உபயோகப்படுத்தினால், மெச்சத்தக்க பலனை தருகின்றன. சொத்தைப்பல், பல் ஈறு வீக்கத்தால் ஏற்படும் வேதனைக்கு துளசிச்சாறு, கிராம்புத்தூள், கற்பூரம் ஆகியவற்றை கலந்து உபயோகித்தல் மிகவும் நல்லது. பேன், அரிப்பு, படை, தேமல், வறட்டு சொறி போன்ற நோய்களுக்கு துளசிச்சாறு, எலுமிச்சம் சாறு, கற்பூரம் ஆகியவற்றை சேர்த்து தலைக்குத் தேய்த்து வர, விரைவில் குணமாகி விடும்.