உள்ளூர் செய்திகள்

மொபைல் போனுக்கும் மயோபியாவுக்கும் என்ன சம்பந்தம்?

ஆசிய மரபணுவில் வந்தவர்களுக்கு, 'மயோபியா' எனப்படும் கிட்டப் பார்வைக் கோளாறு வருவதற்கான சாத்தியம் அதிகம் இருக்கிறது. கருவிழியின் அளவு, வழக்கத்தை விடவும் பெரிதாக இருந்தால், பார்க்கும் பொருளின் பிம்பம், லென்சின் மேல் விழாமல், முன்புறம் படுவதால், பார்க்கும் பிம்பம் மங்கலாகத் தெரியும்.'கம்ப்யூட்டர், மொபைல் போன், லேப் டாப், டேப்' என்று மின் சாதனப் பொருட்களை சார்ந்தே இருப்பதால், அருகிலேயே அதிக நேரம் பார்க்கிறோம். இதனால், கருவிழி மேலும் விரிவடைந்து, பார்வைக் கோளாறு வருகிறது. கிட்டப்பார்வை கோளாறுக்கும், அருகில் பார்த்து வேலை செய்வதற்கும் நெருங்கிய தொடர்புள்ளது.நவீன பொருளாதார வளர்ச்சியில் முன்னேறிய சிங்கப்பூரில், 75 சதவீதம் குழந்தைகள் கிட்டப் பார்வைக்காக கண்ணாடி போட வேண்டிய சூழல் உள்ளது; நம் நாட்டில் இது 25 சதவீதம். பள்ளிக்குச் சென்றால் குறிப்பிட்ட துாரத்தில் இருந்து, கரும்பலகையை பார்க்கும் வாய்ப்பு இருக்கும். ஆன்லைன் வகுப்புகளில் இது சாத்தியமில்லை. 'மைனஸ் 3' என்ற அளவிற்கு குறைந்த 'பவர்' இருப்பவர்கள், கம்ப்யூட்டரில் வேலை செய்தால், பார்வைக் கோளாறு இருப்பதே தெரியாது. பள்ளியில் குறிப்பிட்ட துாரத்தில் அமர்ந்து கரும்பலகையைப் பார்த்தால், எழுத்துக்கள் மங்கலாகத் தெரியும். இதன் மூலம் பார்வைக் கோளாறு இருப்பதை தெரிந்து கொள்ளலாம்.துாரத்தில் இருப்பதைப் பார்க்கப் பார்க்கத் தான் கரு விழி, 'ரிலாக்ஸ்' ஆகி, மேலும் விரிவடையாமல் இருக்கும். கடந்த ஓராண்டாக குழந்தைகளை வெளியில் அதிகம் செல்ல விடுவதில்லை; 9 - 12 மாதங்களில் கிட்டப்பார்வை பிரச்னை அதிகரிக்க வாய்ப்பு குறைவு தான். இதன் பாதிப்பு அடுத்த இரண்டு ஆண்டுகளில் தெரியலாம்.எப்படி சமாளிப்பது?மொத்த சமுதாயமும் அருகில் இருப்பதை பார்க்க வேண்டிய நிலையில் மாறிவிட்ட போது, பார்வைக் கோளாறை முற்றிலும் தவிர்ப்பது என்பது சாத்தியமற்றது. இது தான் வாழ்க்கை என்று ஆகி விட்டால், அதிலிருந்து நம்மால் வெளியில் வர முடியாது. அபரிமிதமான பொருளாதார வளர்ச்சிக்கு நாம் தரும் விலை, பார்வைக் கோளாறுகள்.சிங்கப்பூர், சீனாவை ஒப்பிடுகையில், ஆப்ரிக்காவில் மயோபியா பாதிப்பு மிகவும் குறைவு. அதிக நேரம் அருகில் பார்த்தே வேலை செய்யும் போது, ஆசியர்களாகிய நம் மரபணுவில் கிட்டப்பார்வை அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம்.மரபணுவை நம்மால் மாற்ற முடியாது. அருகில் பார்ப்பதைக் குறைத்து, துாரத்தில் இருக்கும் பொருட்களை அவ்வப்போது பார்க்கப் பழக வேண்டும். சிங்கப்பூரில் பள்ளிக் குழந்தைகளை வாரம் ஒரு முறை வெளியில் சென்று விளையாடுவதை, அந்நாட்டு அரசு கட்டாயமாக்கி உள்ளது.கருவிழி, லென்ஸ், விழித்திரை ஆகிய மூன்றும் கண்களில் பிரதானம். இதில் விழித்திரை என்பது, மூளையில் இருந்து கண்களை இணைக்கும் விரிவாக்கப் பகுதி. கருவிழி அதிக அளவில் விரிவடையும் போது, ஒரே அளவில் இருக்கும் விழித்திரை, கிழிவதற்கான, விலகுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.விழித்திரை, மூளையின் அங்கம் என்பதால், கோளாறுகள் வந்தால், ஓரளவே சரி செய்ய முடியும். எனவே, மைனஸ் 6 என்ற அளவிற்கு மேல் 'பவர்' இருப்பவர்கள், ஆண்டிற்கு ஒரு முறை, விழித்திரையை முழுமையாக பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.டாக்டர் என்.பிரஜ்னா வெங்கடேஷ், கண் சிறப்பு மருத்துவர்,அரவிந்த் கண் மருத்துவமனை, மதுரை. 0452 - 4356500


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !