இலைத்துளையால் மழைத்துளி!
தாவரங்களின் பாகங்களில் இலை மிகவும் முக்கியமானது. இலைகளில்தான் சுவாசம் நடக்கிறது. உணவு உற்பத்தியும் அங்கேதான் நடக்கிறது.இலைகளின் பரப்பில் நிறைய துளைகள் இருக்கும். அவற்றிற்கு இலைத்துளைகள் என்று பெயர். ஆங்கிலத்தில் 'ஸ்டொமேட்டா' (Stomata). இலைத்துளைக்கு இடமும் வலமுமாக, இரண்டு காப்பு செல்கள் (Guard cells) இருக்கும். வாயைத் திறந்து மூட நமக்கு உதடுகள் இருப்பது போல, காப்புச் செல்கள், இலைத்துளைகளைத் திறந்து மூடுகின்றன. கரியமிலவாயு இலைகளுக்கு உள்ளே செல்வதும், ஆக்ஸிஜன் வெளியேறுவதும் இலைத்துளைகள் வழியாகத்தான். தாவரங்கள், வேர்கள் மூலமாக நிலத்தடி நீரை உறிஞ்சி, தண்டுப் பகுதிக்கும் இலைகளுக்கும் கடத்துகின்றன என்பதை அறிவோம். அப்படி உறிஞ்சும் நீரில் 10 சதவிகிதத்துக்கும் குறைவான நீரைத்தான் தாவரங்கள் உணவை உற்பத்தி செய்யப் பயன்படுத்துகின்றன. எஞ்சிய 90 சதவிகித நீர் ஆவியாகி, இலைத்துளைகள் வழியாக வெளியேறிவிடும். அமேசான் காடுகளில் இருக்கும் ஒரு பிரமாண்டமான மரம், ஒரு நாளில் இலைத்துளைகள் வழியாக வெளியேற்றும் நீரின் அளவு 800 லிட்டருக்கும் மேல் இருக்குமாம்! காட்டில் இருக்கும் மரங்கள் அனைத்தும் வெளியேற்றும் நீர் எல்லாம் ஆவியாகி வளிமண்டலத்தில் கலந்தால்... அவ்வளவும் மழை மேகம்! ஒரு மதிய வேளையில், அமேசான் காட்டில் இலைத்துளைகள் வழியாக வெளியேறிய நீராவி மேகமாக உயரும் காட்சியைப் படத்தில் பாருங்கள்!