பழனி பஞ்சாமிர்தத்திற்குக் கிடைத்த அங்கீகாரம்!
குறிப்பிட்ட பிராந்தியத்தில் மட்டுமே விளைகிற அல்லது அங்கே மட்டும் தனித்தன்மையுடன் தயாரிக்கப்படுகிற பொருட்களுக்கு புவிசார் குறியீடு என்கிற மிக உயர்ந்த அங்கீகாரம் வழங்கப்படுகிறது. மதுரை மல்லிகை, நீலகிரி தேநீர், ஈரோடு மஞ்சள், திண்டுக்கல் மலைப்பூண்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா என்று தமிழகத்தின் புகழ்பெற்ற பல பொருட்களுக்குப் புவிசார் குறியீடு கிடைத்திருக்கிறது. இதற்கு முத்தாய்ப்பாக சமீபத்தில் பழனி பஞ்சாமிர்தத்திற்கும் புவிசார் குறியீடு கிடைத்திருக்கிறது. குறிஞ்சி எனப்படும் மலையும், மலை சார்ந்த இடத்தில் வாழ்கிற மக்கள் தாங்கள் வாழ்கிற மலையில் கிடைக்கிற வாழைப்பழம், தேன், ஏலக்காய் போன்றவற்றை இறைவனுக்குப் படைப்பது வழக்கம். எனவே, பழனிமலையில் உள்ள அறுபடை வீடுகளில் ஒன்றான தண்டாயுதபாணி கோவிலிலும் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்யும் வழக்கம் இருக்கிறது. 'பஞ்ச' என்றால் ஐந்து. வாழைப்பழம், வெல்லம், பசு நெய், தேன், ஏலக்காய் ஆகிய ஐந்து உணவுப் பொருட்களைக் கொண்டு பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்கப்படுகிறது. பஞ்சாமிர்தத்தின் ருசியை அதிகரிப்பதற்காக இதனுடன் பேரீச்சம்பழம் மற்றும் கற்கண்டை கூடுதலாகச் சேர்க்கிறார்கள். அதுமட்டுமன்றி, பஞ்சாமிர்தம் தயாரிக்கும்போது, ஒரு துளி தண்ணீர்கூட சேர்க்கப்படுவதில்லை. செயற்கையான, பதப்படுத்தும் பொருட்கள் எதுவும் சேர்க்கப்படாமல், எவ்வித வேதி வினைகளுக்கும் உட்படுத்தப்படாமல் முழுக்க முழுக்க இயற்கை முறையில் மட்டுமே பஞ்சாமிர்தம் தயாரிக்கப்படுகிறது. ஒரு முறைக்கு இருமுறை பஞ்சாமிர்தத்தின் தரம் பரிசோதிக்கப்பட்டு, அதன் பிறகே பழனி பஞ்சாமிர்தம் விற்பனைக்கு வருகிறது. அதனால்தான், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற வெளிநாடுகளிலிருந்து வருகிற பக்தர்களும், பழனி தண்டாயுதபாணி கோவிலுக்குப் போய் ஊர் திரும்பும்போது, பஞ்சாமிர்த பாட்டில்களை வாங்கிச் செல்கிறார்கள்.