உள்ளூர் செய்திகள்

ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா...

சர்வதேச இளைஞர்கள் தினம் ஆகஸ்ட் 12“அறிவாற்றல் பொருந்திய தூய்மை மிக்க 100 இளைஞர்கள் முன்வாருங்கள்! இந்த உலகையே மாற்றி அமைக்கலாம்” என்றார் சுவாமி விவேகானந்தர். 'இளைஞர்கள் பொறுப்பற்றவர்கள்' என்ற பொதுவான கருத்தில் அவருக்குத் துளியும் நம்பிக்கை இல்லை. அதனாலேயே அவர், உலகை மாற்றி அமைக்க இளைஞர்களை அழைத்தார். ஐ. நா. அமைப்பும் இதைத்தான் வலியுறுத்துகிறது. இளைஞர்களின் முழு பங்களிப்பு இருந்தால்தான் சமூக வளர்ச்சி சாத்தியம் என்பது அதன் நம்பிக்கை. உலக நாடுகள், இளைஞர்களின் நலனை முன்னிட்டு அவர்களின் கல்வி வளர்ச்சி, உடல் மற்றும் மனநலம், வேலை வாய்ப்புகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறது. மேலும், இளைஞர் சக்தியை ஊக்குவிக்கும் விதமாகக் கடந்த 2000ஆம் ஆண்டு முதல், ஆகஸ்ட் 12ஆம் தேதியை சர்வதேச இளைஞர்கள் தினமாகக் கொண்டாடிவருகிறது. இளைஞர்களின் சமூகப் பங்களிப்பை அங்கீகரிப்பதும், அவர்களின் நலன் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் இந்த தினத்தின் நோக்கம். உலகிலேயே இளைஞர்கள் அதிகம் இருக்கும் நாடு இந்தியா. இந்திய மக்கள் தொகையில் பாதிப் பேர் 24 வயதுக்கு உட்பட்டவர்கள். ஐ.நா. அமைப்பு 15 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களை இளைஞர்களாக வரையறுத்துள்ளது. அதன்படி கணக்கிட்டால் இந்தியாவில் 18.4 சதவீதத்தினர் இளைஞர்கள். ஏறத்தாழ 5 அல்லது 6 நபர்களுக்கு ஒருவர் இளைஞர். வாழ்க இளைஞர் சக்தி! வெல்க இளைஞர் சக்தி! என்று இளைஞர் தினத்தைக் கொண்டாடுவோம். நீங்கள் இந்த வயது வரம்புக்குள் இல்லை என்றாலும் பரவாயில்லை. அன்று நீங்கள் சந்திக்கும் இளைஞர்களுக்கு வாழ்த்து தெரிவியுங்கள், இளைஞர்கள் முன்னெடுக்கும் விஷயங்களுக்குத் தோள்கொடுங்கள்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !